Sports

இன்னும் நிறைய தோற்பார்... திரும்ப வருவார்... சாதிப்பார்... யெஸ் YOU WE CAN! #HBD_YuvrajSingh

ஒரு மனிதனுக்கு கம்பேக் என்பது ஒருமுறை இருக்கலாம் அல்லது இருமுறை இருக்கலாம். மூன்றாவது முறை தோற்றால் அவன் சோர்ந்துவிடுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அதே உற்சாகம்... அதே வேகம்... அதனால் தானோ என்னவோ அவரது சுயசரிதை புத்தகத்தின் பெயர் ''YOU WE CAN''

விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் புற்றுநோய் தாக்கிய சூழ்நிலையிலும் தன்னை நிரூபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த யுவிதான், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தொடர்நாயகன்.

2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை பரிசளித்து கங்குலியின் லார்ட்ஸ் கர்ஜனைக்கு காரணமானவர். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் ‘தொடர் நாயகன்’. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின் ‘தொடர் நாயகன்’. இப்படி இந்திய கிரிக்கெட் அணியின் சரித்திர நிகழ்வுகளில் கட்டாயம் இடம்பெறும் பெயராக இருந்துள்ளார் யுவி.

நுரையீரல் புற்றுநோய் தாக்கியவுடன் யுவி இனி அவ்வளவுதான் எனக் கூறியவர்கள், இப்போது அவரைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். இனி யுவராஜ், கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்ற கருத்தும் இப்போது மறைந்துவிட்டது.

சிறுவயதில் யுவிக்கு ஸ்கேட்டிங் என்றால் கொள்ளைப் பிரியம். தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்றவர். தென்ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் போல யுவியும் பல விளையாட்டுகளில் பன்முகத் திறமை கொண்டவர். அவரது தந்தை, 'நீ கிரிக்கெட்தான் ஆடவேண்டும்!' என வலுக்கட்டாயமாக கிரிக்கெட்டுக்குள் நுழைத்தார். அதிலும் கில்லி என நிரூபித்தார் யுவி.

2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்பே யுவராஜை புற்றுநோய் தாக்கியிருக்கிறது. அது தெரியாமலேயே களமிறங்கினார் யுவி. லீக் ஆட்டங்களின் போதே அவருக்கு தனக்குள் ஏதோ பிரச்னை என்பது புரிந்தது.

எனினும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. புற்றுநோய் உள்ளேயிருந்து அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. எனினும் அவர் ஆட்டத்தில் சோடை போகவில்லை. யுவிதான் அந்த உலகக் கோப்பையை நமக்குப் பெற்றும் தந்தார். அந்த தொடரின் தொடர் நாயகனும் கூட.

போட்டி முடிந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். அனைவருக்கும் அதிர்ச்சி. இவருக்கா இந்தப் பிரச்னை என கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனை. கிரிக்கெட் உலகம் யுவிக்காக பிரார்த்னையில் ஈடுபடத் தொடங்கியது.

யுவியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் கிரிக்கெட் மீதான காதல்தான் மீண்டும் அவரை மைதானத்திற்கு அழைத்து வந்தது.

புற்றுநோயில் இருந்து மீண்டு அவர் அணியில் இடம்பெற்ற போது, அவர் மீதுள்ள கரிசனத்தால் எடுத்துள்ளனர் எனச் சொல்ல ஆரம்பித்தனர். அப்படி சொன்னவர்களுக்கெல்லாம் யுவராஜின் பேட் தக்க பதில் அளித்தது.

புற்றுநோயில் இருந்து குணமான பிறகு யுவி, முதல் ஆட்டத்தில் இறங்கியது சென்னையில்தான். களத்திற்கு யுவி வரும்போது சென்னை சேப்பாக்கமே எழுந்து நின்று வரவேற்றது. யுவி... யுவி என ஆர்ப்பரித்தது. அந்த போட்டியில் யுவியின் 'ரீஎன்ட்ரி', சிக்ஸருடன்தான் தொடங்கியது. இப்போதும் யுவி 'சேப்பாக்கம் தந்த உற்சாகம்தான் தன்னை கிரிக்கெட் உலகில் மீண்டும் உலாவ வைத்தது' என நன்றியுடன் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனாலும் எல்லா கிரிக்கெட்டர்களுக்கு வரும் ஃபார்ம் அவுட், யுவிக்கும் வந்தது. விளைவு, அணியில் இருந்து கொஞ்ச நாள் ஓரம் கட்டப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த 2015-ம் ஆண்டு முழுவதுமே அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

மீண்டும் அணியில் இடம்...2016ம் ஆண்டு மீண்டும் காணாமல் போகிறார். 2017 சாம்பியன் கோப்பையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை துவம்சம் செய்கிறார். அதன் பின்னர் இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை. பின்னர் கடந்த ஜூன் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய கேப்டன் தோனியின் பயோபிக்கில் ஒரு இளைஞன் ஒட்டுமொத்தமாக எங்களை தோற்கடித்துவிட்டான் என தோனி சொல்லும்போது யுவியின் கிரிக்கெட் காதல் சிலிர்க்க வைக்கும். யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த அதிரடி வீரர். உலகமே வியக்கும் உன்னதமான ஆல்ரவுண்டர்... ஆம் அவர் இன்னும் நிறைய தோற்பார்... திரும்ப வருவார்... சாதிப்பார்... யெஸ் யூவி கேன்!