Sports
“தோல்விக்கு காரணம் இதுதான்” - விராட் கோலி பதில்! #INDvsWI T20
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. முன்னதாக, முதல் டி20 போட்டியில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றியை வசப்படுத்தத் தவறிவிட்டது.
170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும், பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறியதால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதற்கு இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்கே காரணம் என பெரும்பாலானோர் மத்தியில் பேசப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி, சேசிங்கை நோக்கி விளையாடும்போது, புவனேஸ்வர் குமார் வீசிய ஐந்தாவது ஓவரின் 2வது பந்தில் சிம்மன்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் நழுவவிட்டார். வாஷிங்டன் சுந்தர் நழுவ விட்ட இந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றும்விதமாக அமைந்தது. அந்த கேட்ச்சை அவர் பிடித்திருந்தால் ஆட்டத்தின் நிலை வேறுமாதிரி மாறியிருக்கக்கூடும்.
அதே ஓவரில் லீவிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நழுவவிட்டார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரின் கைகளிலும் பந்து பட்டு நழுவி போனது. ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் மிஸ் ஆனது பந்துவீசிய புவனேஷ்வர் குமாருக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றமாக இருந்தது.
இதனால் சிம்மன்ஸ்-லீவிஸ் இணை 70 ரன்கள் வரை சேர்த்தனர். கடைசி ஓவரில் இந்திய பந்துவீச்சாளர்கள், ரன்களை வாரி இறைத்தனர். போட்டியின் இடையே ஜடேஜா வீசிய ஓவரில் ஹெட்மையர் அடித்த பந்தை விராட் கோலி பிடித்த கேட்ச் போட்டியின் சிறந்த தருணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
பவுண்டரி எல்லையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை சிறிதும் சொதப்பாமல் கோலி பிடித்ததால், அனுபவ வீரரின் அசத்தலான கேட்ச் என வர்ணனையாளர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மறுபுறம், இந்தியா முதலில் பேட்டிங் செய்யும்போது, மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி விக்கெட் வேட்டையை நிகழ்த்தினர். கோலி 19 ரன்கள் எடுத்திருந்த போது, அவரை ஆட்டமிழக்க வைத்த வில்லியம்ஸ் அவரது பாணியில் அமைதி என சுட்டிக்காட்டும்படி கோலியை வெறுப்பேற்றினார். முதல் டி20 போட்டியில் விராட் நோட்டில் எழுதுவது செய்து காட்டியதற்கு, இந்த போட்டியில் வில்லியம்ஸ் விராட் போல அமைதி என வம்புக்கு இழுத்தார்.
போட்டிக்கு பின் பேசிய விராட், போட்டியில் அதிக கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதால், தோல்விக்குத் தள்ளப்பட்டதாகவும், மிகவும் மோசமாக ஃபீல்டிங் செய்ததால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது என்றும் கூறினார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!