Sports

“ஊழல் புகாரில் தோனி பெயரையும் சேர்க்கவேண்டும்” : புகாரால் கலக்கத்தில் இருக்கும் தோனி ரசிகர்கள்!

‘அம்ராபாலி’ குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம், வீடு கட்டித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக பொதுமக்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இரண்டு பேர் கொண்ட ஆடிட்டர்கள் குழுவை நியமித்தது. இதனையடுத்து, நிதி மோசடி நடைபெற்றிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என ஆடிட்டர் குழு அறிக்கை அளித்தது.

இதனையடுத்து, மத்திய அரசின் தேசிய கட்டுமானக் கழகம் கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளைக் கட்டி முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அம்ராபாலி நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2010 முதல் 2016ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அம்ராபாலி குழுமத்துக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் தோனியின் பெயரையும் சேர்க்கவேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார்தாரர் ஒருவர் கூறுகையில், "அம்ராபாலி ஊழல் தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்ராபாலி குழுமம் தோனியின் பெயரையும் புகழையும் பயன்படுத்தித்தான் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளது. தோனியின் புகழ், பெயரைப் பார்த்துத்தான் மக்கள் பணத்தைச் செலுத்தியுள்ளார்கள். எனவே, தோனியின் பெயரையும் புகாரில் குறிப்பிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.