Sports

விரைவில் IPL 2020 ஏலம் : கோடிகளில் விலை போகப்போகும் வீரர்கள் யார் ? எகிறும் எதிர்பார்ப்பு !

IPL கிரிக்கெட் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் வரும் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் IPL அணிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள IPL தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். IPL ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த 713 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் இந்தியாவிற்காக விளையாடிய 19 வீரர்களும், உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிய 634 வீரர்களும், குறைந்தபட்சம் ஒரு IPL போட்டியில் விளையாடிய 60 வீரர்களும் களத்தில் உள்ளனர்.

அதேபோல 11 நாடுகளை சேர்ந்த 258 வெளிநாட்டு வீரர்களும் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆப்கானிஸ்தான் (19 வீரர்கள்), ஆஸ்திரேலியா (55வீரர்கள்), வங்கதேசம் (6 வீரர்கள்), இங்கிலாந்து (22 வீரர்கள்),நெதர்லாந்து (1 வீரர்), நியூஸிலாந்து (24 வீரர்கள்), தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39 வீரர்கள்), அமெரிக்கா (1 வீரர்), மே.இ.தீவுகள் (34வீரர்கள்), ஜிம்பாப்வே (3 வீரர்கள்) களத்தில் உள்ளனர்.

வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்தாலும் ஏலத்தில் 73 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதிலும் 29 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த IPL ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பாட் கமின்ஸ், ஜோஸ் ஹாஸில்வுட் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் ஏஞ்சலோ மாத்யூஸ் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல, ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் பங்கேற்கவில்லை.