Sports

சொல்லியடித்த ‘தாதா’... சொந்த ஊரில் ‘சிறப்பான சம்பவத்தை’ நிகழ்த்தவிருக்கும் கங்குலி!

பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

T20 போட்டிகளின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளின் மீதான வரவேற்பு குறைந்துவிட்டது. இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு நேரில், மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்களை அதிகரிப்பது குறித்து விவாதம் எழுந்தபோது, பகல்-இரவு போட்டிகளாக் டெஸ்ட் போட்டிகளை நடத்தினால் அதிகளவிலான ரசிகர்களை ஈர்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார் கங்குலி.பிசிசிஐ தலைவராகப் பதவியேற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் ஆலோசனை செய்த கங்குலி, பகல்-இரவு டெஸ்ட் நடத்த முடிவெடுத்தார்.

உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிய கங்குலி, நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக ஆட சம்மதமா எனக் கேட்டு வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, வங்கதேச கிரிக்கெட் போர்டு பகல்-இரவு ஆட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கங்குலியின் சொந்த ஊர் மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டனில் பகல்-இரவு ஆட்டமாக நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவில் பகல்-இரவு டெஸ்ட் ஆட்டம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. பகல்-இரவு டெஸ்ட் ஆட்டங்களில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசியுள்ள கங்குலி, "ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற குறுகிய அறிவிப்பில் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. இந்திய கேப்டன் விராட் கோலியின் ஒத்துழைப்புக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.