Sports

மீண்டும் கிரிக்கெட் விளையாடப்போகும் சச்சின், சேவாக் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற உள்ள Road Safety World Series தொடரில் விளையாட சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, சேவாக், காலிஸ், முரளிதரன் பிரட் லீ, ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இத்தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 16 வரை மும்பையில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற 110 வீரர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதில் இந்தியன் லெஜன்ட்ஸ், ஆஸி. லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரை புரொபஷனல் மேனேஜ்மெண்ட் குழுமமும் மஹாராஷ்டிரா சாலைப் பாதுகாப்புப் பிரிவும் சேர்ந்து நடத்துகின்றன.

வீரர்கள் சம்பளம் உள்ளிட்டவைகளை அணி உரிமையாளர்கள் கவனித்துக் கொள்வார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் ரோட் சேஃப்டி செல் பயன்படுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட உள்ள சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.