Sports

‘இது சரியான விதிமுறையாகத் தெரியவில்லை’ : உலகக்கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்த இங்கிலாந்து கேப்டன்

2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் டை ஆனதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்கே வெற்றி என்கிற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

ஐ.சி.சி விதிமுறையின்படி இதை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இதுபோன்ற உலகச் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் போட்டிகளில் இப்படி ஒரு விதி முறையை கடைபிடிப்பது சரியானதல்ல என பல கிரிக்கெட் வல்லுனர்களும், விமர்சகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐ.சி.சி விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை முடிவு இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ இரு அணிகளும் பெரிய வித்தியாசமின்றி மிக நெருக்கமாக ஆடிய நிலையில், இந்த மாதிரி முடிவு கிடைத்து கோப்பையை வென்றதை நியாயமானது என்று சொல்ல முடியாது. களத்தில் நடந்தது என்ன என்பதை அறிவேன். ஆனாலும் போட்டியின் முடிவில் என்னால் எதுவும் செய்ய முடியாது. கோப்பையை வென்றதால் எனக்கு எதுவும் எளிதாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.