Sports

இந்திய அணியில் தோனிக்கு இனி இடம் இல்லை : நெருக்கடி கொடுக்கும் பி.சி.சி.ஐ.. வருத்தத்தில் ரசிகர்கள்

தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து முக்கிய பட்டங்களையும் வென்று அசத்தியது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியதும் தோனி கேப்டன்ஷிப்பில் தான். 38 வயதான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து தோனி தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சர்ச்சை மீண்டும் எழுந்தது.

முன்னாள் வீரர்கள் சிலர் தோனிக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தோனி அது குறித்து எதுவும் மனம் திறக்கவில்லை. இதற்கிடையே 2020ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை டி-20 தொடர் வரை தோனி விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், அவருக்கு பி.சி.சி.ஐ தற்போதே நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன. அதாவது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓய்வுபெறச் செய்வது தான் சரியாக இருக்கும் கருதப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் உள்பட அடுத்தடுத்து வரும் தொடர்களில் அணியில் தோனிக்கான நிரந்தர வாய்ப்பு முறை நீக்கப்பட்டு, சாதாரணமாக வீரர்களுக்கு நடத்தப்படுவது போன்று ஆட்டத்திறன் அடிப்படையிலேயே தோனியும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.