Sports
டாப் ஆர்டர் ‘மெகா’ சொதப்பல் : திணறிய மிடில் ஆர்டர் - இந்திய ரசிகர்களை ஏமாற்றிய கோலி & கோ !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றது.
இன்று பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை நோக்கி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா (1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல் (1) என அடுத்தடுத்து இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்களைப் பெற்று பரிதாபமான நிலையை அடைந்தது இந்திய அணி.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி விக்கெட் இழப்பைத் தடுக்க நிதானமாக ஆடினார். தோனி ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்க, ஜடேஜா மறுபக்கம் சிக்ஸர்களை தெறிக்கவிட்டு நம்பிக்கையூட்டினார்.
ஜடேஜா அதிரடியாக விளையாடி வந்த நிலையில், 77 ரன்களில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒரே நம்பிக்கையாக, களத்தில் இருந்த தோனி இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தோனி 72 பந்துகளைச் சந்தித்து 50 ரன்கள் அடித்ததோடு வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா அடுத்தடுத்து ஆட்டமிழக்க கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இறுதியாக, 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இந்திய அணி. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. கடந்த 2015 உலக கோப்பையிலும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய இந்திய அணி தற்போதும் அரையிறுதியோடு தாயகம் திரும்புகிறது.
இந்த முறை கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!