Sports

2008 மோதிய இந்தியா-நியூஸிலாந்து: 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதல்? வெற்றி யாருக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகலில் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் 2008ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியை நினைவூட்டும் வகையில் உள்ளது.

மலேசியாவில் 2008ம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.

கேன் வில்லியம்சனின் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியா வெல்ல உதவினார்.

பந்துவீச்சில், கோலி 7 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்தார். அப்போதைய நியூசி., கேப்டன் வில்லியம்சன் உட்பட இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் அவர் எடுத்தார்.

நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. மழை காரணமாக இந்தியாவுக்கு 43 ஓவரில் 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கோலி 43 ரன்கள் சேர்த்தார்.

இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோலி தலைமையிலான அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது.

இப்போது அதேபோல, இந்திய அணிக்கு கோலி கேப்டனாகவும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 2008 அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றதுபோல், தற்போதும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.