Sports

தோனி, ராகுல் அதிரடி சதம் : வங்கதேசத்துக்கு 360 ரன்கள் இலக்கு! 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதாக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

உலகக்கோப்பை தொடர் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்பான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. நியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் இந்தியா 179 ரன்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், இந்திய அணி வங்க தேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆடி வருகிறது. கடந்த பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் வெகுவாகச் சொதப்பிய நிலையில் பேட்டிங்கை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய அணி வீரர்கள்.

இந்தப் பயிற்சி ஆட்டம் கார்டிஃப்பில் இருக்கும் சோஃபியா கார்டன்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி வங்க தேச அணிக்கு 360 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் எம்.எஸ்.தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் எடுத்தனர். முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்தது. இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது வங்கதேச அணி.