Sports

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி : கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்காலத் தடை!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார். 2 நிமிடம் 2 விநாடிகளில் எல்லையைக் கடந்து சாதனை படைத்தார் கோமதி.

இந்நிலையில், தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டதாக முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது முதற்கட்ட சோதனை மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாவது கட்ட சோதனையில் கோமதி ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதோடு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சை குறித்து கோமதி மாரிமுத்து பேசுகையில், “நான் எந்தவிதமான ஊக்கமருந்துகளையும் பயன்படுத்தியது இல்லை. இது குறித்து இந்திய தடகள சம்மேளனம் விளக்கமளிக்கவேண்டும்” எனக் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆசிய தடகள போட்டியின்போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கோமதி மாரிமுத்துவுக்கு போட்டிகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிப்பதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.