Politics

நேபாள வெள்ளம்.. சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!

நேபாள திடீர் வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி. அவசரக் கடிதம்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் உள்ளிட்ட பல இந்திய சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதுடன் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்கக் கோரி, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கழக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளருமான தயாநிதி மாறன் எம்.பி. அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உங்கள் கவனத்தை ஈர்க்க, இக்கடிதத்தை எழுதுகிறேன். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 பேர் உட்பட இந்திய சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள துயரமான நிலை மற்றும் அங்கு நிலவும் தீவிரமான சூழல் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

இப்பேரிடரால் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டும்; தகவல் தொடர்பு அமைப்புகளைக் கடுமையாகப் பாதித்தும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில் பலரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 சுற்றுலாப் பயணிகள் உட்படப் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், கடினமான நிலப்பரப்பு மற்றும் தொடர்ந்து நீடிக்கும் வெள்ளச் சூழல் காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வேகமாக மாறிவரும் சூழ்நிலைகள் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த கவலை நிலவுகிறது.

எனவே, இப்பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற இந்தியக்

குடிமக்கள் அனைவரையும் கண்டறிந்து, மீட்டு, பாதுகாப்பதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உதவுமாறு இந்தியத் தூதரகம் மற்றும் மீட்புக் குழுக்களுக்குத் தயவுசெய்து உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!