Politics

அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனை அம்பலப்படுத்தும் வகையில், அருப்புக்கோட்டை உழவர் சந்தை அருகே உள்ள நியாயவிலைக் கடையில், தமிழக வெற்றிக் கழக நகரச் செயலாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்வு தொடர்பான ‘ரீல்ஸ்’ காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

கடந்த மாதம், இதே போல் நகரச் செயலாளர் தாமரைச்செல்வன் ஒரு நியாயவிலைக் கடையில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வைத்து ‘ரில்ஸ்’ காணொளி வெளியிட்டது சர்ச்சையானது.

அதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திக் குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை மாட்டி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய காணொளியும் பேசு பொருளாகியது.

மேலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு த.வெ.க.வினர் சால்வை அணிவித்ததுடன், அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனால், “அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம் மற்றும் நியாயவிலைக் கடை போன்ற இடங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி உள்ளதா?” என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் அட்டூழியத்தில் ஈடுபடும் த.வெ.க.வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read: “சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!