Politics

‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் அதே பகுதி பெண்ணை காதலித்து வந்தார் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வர பெண்ணின் தகப்பனார் தவெக நிர்வாகியான ஏழுமலை மற்றும் அவரது மகன் கௌதம் இருவரும் கூலிப்படையை ஏவி காதலன் பிரவீன் குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 21) மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கேளம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து ஏழுமலை, நிதிஷ் மற்றும் மணிகண்டன், கௌதம் ஆகிய நான்கு பேரை  கைது செய்தனர் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை செய்தனர். தலைமறைவாக உள்ள நபர் பற்றி கௌதமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

உடற்கூராய்விற்குப் பிறகு பிரவீன் குமாரின் உடல் அவரது  இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் தனது நண்பனுக்கு நீதி வேண்டுமென திடீரென ஓஎம்ஆர் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேளம்பாக்கம் காவல்துறையினர் இளைஞர்களுடன் சுமார் 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஓஎம்ஆர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொலைச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரில் 4 பேரை கேளம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமுறைவாக இருந்த சதீஷை இன்று (ஆகஸ்ட் 22) கண்டுபிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது போன்ற குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையையே கேள்விக்குறியாக்கி வரும் நிலையில், எந்தப் பதிலும் கூறாமல் வழக்கம்போல் அமைதியாக இருந்து வருகிறார் உள்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் விஜய்.

மாநிலத்தின் முக்கிய குற்றச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சர் இந்த சம்பவத்தில் கட்சி நிர்வாகியென பார்க்காமல் நடவடிக்கை எடுப்பாரா? தகுந்த பதிலை அளிப்பாரா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “உங்கள் பூச்சாண்டி வேலைகள் எல்லாம் தி.மு.க.விடம் பலிக்காது” : அமைச்சர் ரமேஷிற்கு சேகர் பாபு பதிலடி!