Politics

“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!

சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், இன்று (ஆக.16) கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, கழக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கழக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கழக சட்டத்துறை சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

திமுகவில் மட்டும் தான் ஒரு அணிக்கு சட்டத்துறை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை தனித்துவம் வாய்ந்தது என புரிந்து கொள்ள முடிகிறது.

திமுகவின் Most Wanted அணி சட்டத்துறை அணிதான். தேர்தலுக்கு முன்பு அனைத்து அணிகளும் வேலை செய்தோம். தற்பொழுது தேர்தலுக்குப் பிறகு சட்டத்துறைக்கு அதிக வேலை உள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கழகத்தின் மிகப்பெரிய ஊக்க சக்தியாக, முதுகெலும்பாக திகழ்வது கழக சட்டத்துறைதான். திமுக-வின் வரலாற்றில் கழக சட்டத்துறையின் பங்கு அளப்பரியது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறைவிற்கு பிறகு அண்ணா நினைவிடத்திற்கு அருகில் நினைவிடம் அமைக்கப்பட வேண்டுமென ஆசைப்பட்டதை சட்டப் போராட்டம் நடத்தி நிறைவேற்றியது சட்டத்துறை அணிதான்.

தமிழ்நாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது.தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி ஆட்சிக்கு வந்துள்ள சர்க்கஸ் கூட்டமே எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள் தான் வந்துள்ளது.

கடந்த 100 நாட்களில் திமுக வழக்கறிஞர்‌ அணி தான் மிகவும் பிசியாக இருக்கிறார்கள்.

நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது, சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கைது என ஒரு மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது.” காலை தூங்கி எந்திரித்தால் யாரை கைது செய்யலாம் என அட்டவணை போட்டு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தஞ்சாவூரில் விவசாய விரோத தவெக அரசை கண்டித்து, திமுக சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக என்னைக் கைது செய்ய முயற்சித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினேன் யோசித்தேன், “டம்மி முதலமைச்சர் எனக் கூறினேன் அதை ஒப்புக்கொண்டார்கள். கேடுகெட்ட, வெட்கங்கெட்ட அரசு எனக்கூறினேன். இதற்கெல்லாம் எந்த ரியாக்சனும் இல்லை. ஆனால், காவிரியில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதால் கைது நடவடிக்கை எடுக்க முயற்சித்துள்ளனர்.

என்னைக் கைது செய்ய காவல்துறையினர் வந்த பொழுது உடனடியாக வழக்கறிஞர் அணியை தான் தொடர்பு கொண்டேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் வருவார்கள். அதுவரை அவர்களிடம் விசாரித்துக் கொண்டு இரு என திமுக தலைவர் அறிவுறுத்தினார்.

கைது செய்த போது, என்னை சட்டமன்றத்தில் பேச தடுக்கிறார்களா என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்களுக்கு அந்த அளவிற்கு எல்லாம் அறிவு கிடையாது. என்னுடைய கைது நடவடிக்கை ஒரு நகைச்சுவை என தெரிவித்தேன்.

யார் அமைச்சர்கள், யார் சட்டமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் தெரியவில்லை. டம்மி முதலமைச்சருக்கே எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் யார் எனத் தெரியாது.

சட்டமன்றத்தில் ஒரு துறைப்பற்றி கேள்வி கேட்டால், மற்றொரு அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசுகின்றனர். ”நாம் ஒரு கேள்வி கேட்டால், நம்மை அசரவைக்கும்படி ஒரு பதில் சொல்வார்கள்” என்ற நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.

சொல்லி அடிப்பது போல் என்னுடைய கைது நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய வைத்ததும் வழக்கறிஞர் அணி தான். தஞ்சாவூருக்கு செல்வது ஜாலியாக ட்ரீப் செல்வது போல் சென்றோம். வழக்கறிஞர் சரவணன், பி.கே.சேகர்பாபு மா.சுப்ரமணியன் உள்ளிட்டோருடன் சென்றோம்.

என்னைக் கைது செய்ய முயற்சித்ததன் மூலம், தேர்தலுக்கு பிறகு சற்று சோர்ந்திருந்த கழகத் தொண்டர்களுக்கு உற்சாகம் கிடைத்துள்ளது. மீண்டும் நம் உடன்பிறப்புகளை பழைய ஃபார்முக்கு கொண்டு வந்ததற்கு இந்த அரசுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

கடந்த 100 நாட்களில் என்னை மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஜென் சி இளைஞர்களையும் கைது செய்துள்ளார்கள். தேர்தலுக்குப் பிறகு ஜென்சி இளைஞர்களை எழுப்பி விட்டிருக்கிறோம்.

பவர் இல்லாத போது, எதிர்கட்சியாக இல்லாத பொழுது ஆளும் முதலமைச்சரை ஊழல் வழக்கில் சிறைக்கு‌ அனுப்பிய அணி திமுக வழக்கறிஞர்‌ அணி.

சீட்டுகட்டில் 1 ஜோக்கர் இருக்கும். ஆனால் தற்போது ஆளும் அரசில் இருக்கும் 52-ம் ஜோக்கராக இருக்கிறது. “லாட்டரி அமைச்சர், பிளாக் டிக்கெட் வித்தவர், திருட்டு விசிடி விற்றவர், உருட்டுக்கட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர், சங்கி அமைச்சர்” என அடைமொழியில் அமைச்சர்களை சொன்னால் தான் மக்களுக்கு புரிகிறது.

ஃசோபா மாடல் தவெக அரசுக்கு, நம் கழகத்தைப் பற்றியோ, கழக சட்டத்துறையின் வரலாற்றைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைதின் போதெல்லாம், கழகத்திற்கு நெருக்கடி வந்த காலத்தில் அதனை உடைத்து நொறுக்கியது கழக சட்டத்துறைதான்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் என்றால் வழக்கு. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் ஃசோபா அனுப்பி ராஜினாமா செய்ய வைப்பது. இதுதான் அவர்களது வேலையாக உள்ளது.

மாற்றம், தூய்மையான அரசு அமைப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி, ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல். இதுகுறித்து ஆளும்கட்சி நிர்வாகியே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மாற்றம் எனக் கூறி கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வர வேண்டும்

கோவையில் போ*ப் பொருள் பயன்பாடு குறித்து காவல்துறையிடம் தகவல் கொடுத்த கல்லூரி மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் கொ* செய்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், கல்வித்துறை அமைச்சர் கோஷ்டி பூசல் என பொய்யான பதிலைச் சொல்கிறார்.

“உயி*ழந்த மாணவர் அமுதனின் தாயார் திமுக-வின் மேல், கழகத் தலைவர் மேல் நம்பிக்கை வைத்து நீதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அமுதனின் மர*த்திற்கு நீதி கிடைக்க நிச்சயம் திமுக துணை நிற்கும். சட்டமன்றத்தில் இதுகுறித்து குரல் கொடுப்போம்.”

ஜென்-ஸி இளைஞர்கள் கொள்கையே பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அதுதான் இன்றைய ஆட்சிக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. அவர்களை கைது செய்தால் அவர்களும், அவர்கள் குடும்பமும் பயந்து விடுவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டும்.

ஜென்சி இளைஞர்களை ஒருங்கிணைத்து பணியாற்றுங்கள். ஆளுங்கட்சியினர் குற்ற செயல் ஈடுபட்டால், அவர்களை சும்மா விடக்கூடாது. நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரும்வரை நீங்கள் அந்த வழக்கை ஃபாலோ செய்ய வேண்டும்.

அதிகாரத் திமிரில் ஆளும் கட்சியினர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளார்கள். இந்தச் சூழலில் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கழக சட்டத்துறை அணி இருக்கும். மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

Also Read: “திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!