Politics

‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்!

இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தினாலும், அதனை மறுத்து ஒரு குறிப்பிட மதக் குழுவின் சாயலை நாடு முழுவதும் பரப்பும் வகையில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட மதக்குழு என்பதைக் கடந்து, பிற மதங்களை சார்ந்தவர்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்திருக்கிறவர்களுக்காவது பா.ஜ.க நன்மை செய்கிறதா? என்றால், கண்டிப்பாக இல்லை. அதிலும் ஏற்றத்தாழ்வுகளே ஓங்கி வருகின்றன.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டினருக்காக, பெரும்பான்மையான 99 விழுக்காடு மக்களின் தன் உரிமை, தனிப்பட்ட விருப்பங்களில் தலைநீட்டி வருகிறது ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.

இவ்வரிசையால், இந்தியாவின் அரசியலமைப்புக்கு எதிராக, இந்தியாவின் சமநிலை உணர்வை சிதைக்கும் வகையில், ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை, தேசிய அளவில் கட்டாயமாக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது பா.ஜ.க அரசு.

இதனைக் குறிப்பிட்டு, “இந்தியா என்ற நாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், 120-க்கும் மேற்பட்ட மொழிகள், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை குறித்து மட்டுமே இயற்றப்பட்ட, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அரசர்களை எதிர்க்கும் வகையில் இயற்றபட்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை, தேசிய பாடல் என்று நாடு முழுக்க திணிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்” என பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், “வந்தே மாதரம் பாடலை பாட வேண்டிய அவசியமில்லை. அது சட்டப்படி குற்றமில்லை. வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை பாட யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், மீதம் இருக்கிற 4 பத்திகளை பாடுவதில்தான் சிக்கல். காரணம், அது குறிப்பிட்ட மதத்தை சார்ந்தது. குறிப்பிட்ட மதக் கடவுளை புகழும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, தேசிய பாடல் என்ற ஒன்று இல்லை. தேசிய கீதத்தை பாட வேண்டும் என்பதுகூட, தேசிய அவசரக்காலநிலையில் (Emergency) கொண்டுவரப்பட்டதுதான்.

வந்தே மாதரம் பாடல் என்பது இந்திய நாட்டைப் பற்றிய பாடல் இல்லை. இந்த பாடலை எழுதிய பங்கிம் சந்திரர் என்பவருக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.

1858ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் துணை ஆட்சியாளராக முதலில் நியமிக்கப்பட்டவர்தான் பங்கிம் சந்திரர். அப்படி இருக்கிற நிலையில், வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்குவது, அனைவரையும் பாட செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Also Read: கொள்கைத் தலைவர் பெரியார்.. ஆனால் பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு.. விஜய்க்கு ஏன் பதற்றம்? : முரசொலி!