Politics

“தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3ம் இடம்.. ஆளுநரை எதிர்க்க தவெக அரசு அஞ்சுவது ஏன்?”

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 28) பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பட்டங்களை வழங்கினார் ஆளுநர்.

ஆனால், இந்த பட்டமளிப்பு விழா குறித்து சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் என். சந்திரசேகர், பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் தான் முதலில் பாடப்படும், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாகத் தான் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதுதான் எங்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிவுறுத்தல். அதைத்தான் நாங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். இதுதான் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், இந்தப் பிரச்சனை குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இன்று நடைபெற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, மூன்றாவது இடத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்படுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கழக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது.

வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா? என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி, தமிழ்த்தாய் வாழ்த்துக்காக ஆளுநரை எதிர்க்க தவெக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய தமிழ்ப் பெருங்கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை 3ம் இடத்திற்குத் தள்ளிவிட்டு வந்தே மாதரத்தை முதலில் ஒலிக்கச் செய்து தமிழ்நாட்டையும், மொழியையும் அப்பட்டமாக அவமதித்துள்ளார் ஆளுநர்!

தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து அவமதிக்கப்படும்போதும், ஆளுநரைக் கண்டிக்கக் கூட வக்கில்லாமல், அவருக்கு அஞ்சி நடுங்கி மௌனியாகப் பதுங்கிக் கிடக்கிறது இந்த டம்மி முதல்வரின் தவெக அரசு!

தன் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆளுநரிடம் ரகசியச் சமரசம் செய்துகொண்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மானத்தையும் டெல்லியிடம் அடமானம் வைத்துவிட்டதா இந்த கோழை அரசு?

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரைச் சட்டமன்றத்தை விட்டே ஓடவிட்ட நெஞ்சுரம் மிக்க திமுக அரசு எங்கே? பதவிக்காகத் தன் தாய்மொழியையே ஆளுநரின் காலடியில் அடமானம் வைக்கும் இந்தச் சுயநலக் கோழைகளின் அரசு எங்கே?

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே முதல்வர் பதவியேற்பு விழா, சட்டமன்றம், இப்போது பட்டமளிப்பு விழா எனத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர் அவமானங்கள் அரங்கேறி வருகின்றன.

தமிழர்களின் சுயமரியாதையை விற்றுச் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த அடிமை அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! என பதிவிட்டுள்ளது.

Also Read: “மேகதாது விவகாரம்.. படவசூல் பாதிக்கும் என.. தமிழ்நாட்டின் உரிமை அடகுவைப்பு” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!