Politics

“முதலமைச்சர் விஜய்யின் மவுனத்தால், காவல்துறை மரணங்கள் தொடர்ந்து வருகிறது!” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்து வருவதும், அது குறித்து முதலமைச்சர் விஜய், எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவதும் தொடர் கதையாகியுள்ளது.

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்கிற இளைஞர் இன்று (ஜூலை 23) எதிர்பாராத வகையில் மரணமடைந்துள்ளார்.

அவரது உடலை, பெற்றோரின் அனுமதி இல்லாமலேயே உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளது காவல்துறை. இதனால், அருணாச்சலத்தின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு, த.வெ.க ஆட்சி அமைந்த 2 மாதங்களில் காவல்துறை சார்ந்த மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், அது குறித்து வாய் திறக்காமல், ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்தை ரசித்து வருகிறார் கதைநாயகனும், முதலமைச்சருமான விஜய்.

இதனை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?”

Also Read: போராட்ட எழுச்சி ஒருபுறம்; ஜனநாயகனின் கொண்டாட்டம் மறுபுறம்! : தடம் மாறுகிறதா தமிழ்நாடு?