Politics

“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!

இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.5) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் இலங்கையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதனை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தங்க தமிழ்செல்வன், செல்வகணபதி மற்றும் கணபதி ராஜ்குமார் ஆகியோர் தங்களது கேள்விகளை முன்வைத்தனர்.

அவர்கள் தெரிவித்தவை பின்வருமாறு,

“உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களின் நிலை கவலை அளிக்கிறது.

அண்மையில் இலங்கையின் நெடுந்தீவு பகுதி அருகே மீனவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் உட்பட நிகழ்வுகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இது தொடர்பாக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வரிடமிருந்து கடிதங்கள் பெறப்பட்டும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகள் என்ன?

இந்த கடுமையான பிரச்சினைக்கு நிரந்தர இணக்கமான தீர்வைக் காண வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

இலங்கையால் கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளான மீனவர்களின் விவரங்கள் யாவை?

காயமடைந்த மீனவர்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து உடனடி இழப்பீடு அல்லது மறுவாழ்வு கிடைத்துள்ளதா?

வெளிநாட்டு கடற்படைகள் இந்திய மீனவர்களை மீண்டும் மீண்டும் மிரட்டவும், தாக்கவும், கைது செய்யவும் அனுமதிக்கும் வகையில், நமது சொந்த கடல் எல்லையில் வலுவான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.”

Also Read: திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!