Politics

ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இந்தியா, கர்னல் சோபியா குரேஷி தலைமையிலான படைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆபரேசன் சிந்தூர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்ட பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச பழங்குடியினர் துறை அமைச்சர் விஜய் ஷா, தீவிரவாதிகள் மற்றும் கர்னல் சோபியா குரேஷியை மதரீதியாக ஒப்பிட்டு பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஶ்ரீதரன், விஜய் ஷா மீது, 4 மணி நேரத்தில் வழக்குப் பதிந்து, பி.என்.எஸ். சட்டம் 152ன்படி விசாரிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நீதிபதி அதுல் ஶ்ரீதரன் ஒன்றிய அரசின் வேண்டுகோளின் படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அதுல் ஶ்ரீதரன் ஐந்து மாதங்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார்.

இதனிடையே அவரை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய ஒன்றிய அரசு பரிந்துரை வழங்கியது. இந்த கோரிக்கையை ஏற்று நீதிபதி அதுல் ஶ்ரீதரன் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் நேற்று அறிவித்துள்ளது. அதே போல அரசின் மறு பரிசீலனை கோரிக்கை என்பதை உச்ச நீதிமன்ற அறிக்கையில் வெளிபடையாக தெரிவித்திருப்பது அசாதாரண அறிவிப்பாக கருதப்படுகிறது.

Also Read: பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !