Politics

“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!

கரூரில், இன்று (17-09-2025) நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் விவரம் வருமாறு:

இது முப்பெரும் விழாவா, விரைவில் நாம் சந்திக்க இருக்கும் வெற்றி விழாவா...!

இது கரூர் அல்ல; திராவிட முன்னேற்றக் கழக ஊர்!

கொட்டும் மழையில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், இதே நாளில் வடசென்னைப் பகுதியில் அமைந்திருக்கும் ராபின்சன் பூங்காவில் கழகத்தைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு தொடங்கி வைத்த இந்தக் கழகம், 75-ஆம் ஆண்டுகாலம் மட்டுமல்ல, நூற்றாண்டும் நாம் காணப் போகிறோம்.

உங்களிடம் பேசுவதைவிட, இந்தக் கொட்டும் மழையிலும் உங்களின் எழுச்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எனக்கு உணர்வு ஏற்பட்டிருக்கிறது! என்ன உணர்ச்சி! என்ன ஆர்வம்!

என் உயிரோடு கலந்திருக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளே உங்களுக்கு என் முதல் வணக்கம்!

இந்த ஆண்டு முப்பெரும் விழாவைக் கரூரில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு, அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்கள், என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன்... பொதுக்கூட்டம் என்று சொல்லி, மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கே ஏற்பாடு செய்திருக்கிறார், செயல்வீரர் செந்தில்பாலாஜி அவர்கள். நாம் கோடு போடச் சொன்னால் ரோடு போடுவார்... நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ரோடு போட்டு, அந்த ரோட்டு மேல்தான் நான் வாகனத்தில் வந்தேன்!

மேற்கு மண்டலத்தில் நம்முடைய எதிரிகளுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக இருப்பவர்தான், நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள்! அதனால்தான், அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று, அவரை முடக்கப் பார்த்தார்கள்! ஆனால், அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுவார்!

நான் உறுதியாகச் சொல்கிறேன்… கழக வரலாற்றிலேயே, இப்படியொரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது! கொட்டுகின்ற மழையாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டு நாற்காலிகளைத் தலையில் வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... இது ஒன்றே சாட்சி!

இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று உழைத்த அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் – அவருக்குத் துணை நிற்கும் கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்! தலைமைக் கழகத்தின் சார்பில் இருகரம் கூப்பி என்னுடைய நன்றியையும் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்!

14 வயதில் கருப்பு - சிவப்பு கொடி பிடித்து, கழகம் – கழகம் என்று உழைக்கத் தொடங்கிய என்னை, இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தவர்கள் நீங்கள்! ஓயாமல் உழைக்கும் உதயசூரியன்களான உங்களை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் எனக்கு புது எனர்ஜி வந்துவிடும்! காடு - மேடு, இரவு - பகல், மழை - வெள்ளம், அடக்குமுறைகள், போராட்டங்கள், சிறைச்சாலைகள் என்று, நீங்கள் அனைவரும் போராடித்தான், என்னைத் தலைவர் ஆக்கி இருக்கிறீர்கள்!

மக்களின் ஆதரவுடன், இன்றைக்கு நாடே திரும்பிப் பார்க்கும் நம்முடைய திராவிட மாடல் அரசையும் நீங்கள்தான் உருவாக்கி, என்னை முதலமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்தீர்கள்! உங்களைச் சந்திப்பதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி!

முப்பெரும் விழா என்றால், பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் - அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள் - ஆகிய மூன்றையும் சேர்த்து, இந்த திராவிட மாதத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறோம்.

இந்த விழாவில், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அதிலுள்ள மேடு - பள்ளங்களைத் திருத்திக் கொள்ளவும், நாம் அடுத்து செல்லவுள்ள பாதையை - வெற்றிப் பாதையாகச் செப்பனிடவும் ஓரிடத்தில் ஒன்றுகூடியிருக்கிறோம்!

கூடிக் கலையும் விழாவாக இல்லாமல், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, கருத்தாழமிக்க எண்ணங்களை பகிர்ந்து, கொள்கைகளைக் கூர்தீட்டும் நிகழ்ச்சியாக இது நடந்து கொண்டிருக்கிறது!

அதனால்தான், திராவிடக் கொள்கைகளை தூக்கிப் பிடித்து உழைத்தவர்களுக்கு மரியாதை செய்து, விருதுகள் வழங்குகிறோம்! இந்த ஆண்டு, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான விருதைக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் - நாடாளுமன்ற குழுத் தலைவருமான என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி பெற்றிருக்கிறார். அவர், பார்த்தால் கனிமொழி;

நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி! திராவிட இயக்கத்தின் திருமகளாக - பெரியாரின் பேத்தியாக – பார்லிமெண்ட்-இல் ஒலிக்கிறார்!

அடுத்து, பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை நம்முடைய அண்ணன் சுப. சீதாராமன் அவர்கள் பெற்றிருக்கிறார். அரசு ஊழியராக இருந்த இவரை, “ராஜினாமா செய்துவிட்டுல் கழகப் பணியாற்ற வா” என்று நம்முடைய தலைவர் கலைஞர் அழைத்தார். எப்போதும் தலைவர் கலைஞரின் சொல்லைத் தட்டாத உண்மையான தொண்டர் அண்ணன் சுப. சீதாராமன் அவர்கள்!

அடுத்து, தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதை நூற்றாண்டு கண்டவரான அண்ணன் சோ.மா. ராமச்சந்திரன் அவர்கள் பெற்றிருக்கிறார்! மிசா காலத்தில் ஓராண்டு காலம் என்னுடன் ஒரே கொட்டடியில் இருந்தவர், அண்ணன் சோ.மா. ராமச்சந்திரன் என்பது எனக்குக் கிடைத்த பெருமை!

அடுத்து, புரட்சிக் கவிஞர் - பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலான விருதை மறைந்த அண்ணன் குளித்தலை சிவராமன் அவர்களது குடும்பத்தினர் பெற்றிருக்கிறார்கள்!

கலைஞர் அவர்கள் முதன்முதலாகப் போட்டியிட்ட குளித்தலை தொகுதிக்காரர் அவர்! அவருக்கு சிறப்புச் செய்ய அறிவித்த இந்த விருதை, அவர் பெற முடியாமல் போயிருந்தாலும், நம் இதயங்களில் நிறைந்திருக்கிறார்!

அடுத்து, இனமானப் பேராசிரியர் பெயரிலான விருதை அண்ணன் மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். தலைவர் கலைஞர் இட்ட கட்டளைகளைத் தவறாமல் நிறைவேற்றிய செயல்வீரர் அவர்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் பாடுபட்டவர்! இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருப்பவர்!

அடுத்து, எனது பெயரிலான விருதை அண்ணன் பொங்கலூர் பழனிசாமி அவர்கள் பெற்றிருக்கிறார்! மொழிப் போராட்டம் உருவாக்கிய தளகர்த்தர்களில் ஒருவர்! கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அவருடைய லெட்டர் பேடில்தான், 'கோரிக்கை ஏற்கப்பட்டது' என்று தலைவர் கலைஞர் தன் கைப்பட எழுதினார்.

அடுத்து, முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் பெயரிலான விருதைப் பெற்றிருப்பவர், மூத்த பத்திரிகையாளர் - எழுத்தாளர் - ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள்! திராவிட இயக்கம் வலியுறுத்தி வரும் சமூகநீதியை - மானுடப் பற்றை - மனித உரிமைச் சிந்தனைகளை - ஆங்கில ஊடகங்களில் எழுதி வருபவர் மரியாதைக்குரிய ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள்.

அதேபோன்று, கழகத்தின் வெற்றிக்கும் புகழுக்கும் அடித்தளமாக – ஆணிவேராக இருக்கும், ஒன்றியம் – பகுதி – நகரம் – பேரூர்க் கழகங்களில் சிறப்பாகப் பணியாற்றிய உடன்பிறப்புகளும் இங்கு விருது பெற்றிருக்கிறார்கள்.

விருது பெற்ற அனைவருமே ஒவ்வொரு விதத்தில் பெருமைக்குரியவர்கள். விருது பெற்ற அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பிலும் - கழக உடன்பிறப்புகள் சார்பிலும் - உங்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்!

திறமை - உழைப்பு - அறிவு - ஆற்றல் - ஆகியவற்றை ஒருங்கே பெற்ற தீரர்களின் கோட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிநின்று, தமிழினத்தின் எழுச்சிக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்கிறவர்கள் நாம்!

2019-ஆம் ஆண்டுமுதல், நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல; எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026-இலும் நிச்சயம் தொடரும்! திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்!

நான் பெருமையுடன் சொல்கிறேன்... இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது... எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்... இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள்... “கழகம் நம்மைக் காத்தது! நாம் கழகத்தை காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்க முடியாது!

உங்களுக்குத் தலைமை தொண்டனாக இருப்பது, என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு!

உங்கள் உழைப்பைத் தொடர்ந்து கொடுத்து, திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும்! அதன்மூலமாக, தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது என்று நாம் புது வரலாறு படைக்க வேண்டும்! வரலாறு படைக்கலாமா! தயாராகி விட்டீர்களா!

அதற்காகத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று ஒரு பரப்புரையை முன்னெடுத்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று - அனைத்து வீடுகளுக்கும் சென்று, ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை நம்முடைய இயக்கத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம்!

ஒரு கோடி குடும்பங்கள் நம்மை நம்பி இணைந்திருக்கிறார்கள் என்றால், அந்த நம்பிக்கைக்கு என்ன காரணம்? தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்! அதற்குத் துணையாக இருப்போம் என்று அவர்களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்தக் கொள்கை என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்... அது, காவிக் கொள்கை! இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்தக் கொள்கைக்கு எதிராக திராவிடம் – இந்த இயக்கம் போராடிக்கொண்டு இருக்கிறது! இன்றைக்கு அந்தக் கொள்கையின் அரசியல் முகம் - பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்!

இரண்டு நாட்களுக்கு முன்புகூட, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன பேசியிருக்கிறார்? “கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க.தான்” என்று உண்மையைப் பேசியிருக்கிறார்! அந்தக் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறியத் தி.மு.க.தான் காரணம் என்று நம்மீது வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

அதனால்தான், தொடர்ந்து நமக்கு இவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அதைப் பார்த்து பயந்து முடங்கிவிடுவோம் என்று நினைத்தார்கள்...

தி.மு.க. – என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம்! 75 ஆண்டுகால ஹிஸ்டரி இருக்கிறது நமக்கு! அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே - “தி.மு.க.வை அழிப்போம் – ஒழிப்போம்” என்று சொன்னார்கள்! இப்போதும், சிலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே...

“தி.மு.க.விற்கு நாங்கள்தான் மாற்று” என்று... என்ன மாற்றப்போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப்போகிறார்களா? நம்முடைய கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா? மாற்றம்... மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்... மறைந்து போனார்கள்... ஆனால், தி.மு.க. மட்டும் மாறவில்லை! தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை! இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்! நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம்! நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது!

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, எவ்வளவோ நெருக்கடியில் வந்தோம்... ஒருபக்கம் நிதிப் பற்றாக்குறை, இன்னொரு பக்கம், கொரோனா பெருந்தொற்று, இதையெல்லாம் மீறி, நான்கரை ஆண்டுகளில் இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு, ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து – வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் ஒரே மாநிலம் எது என்று கேட்டால், “தமிழ்நாடு” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் அளவுக்கு, முதன்மை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம்!

இதனால்தான், நம்முடைய திராவிட மாடல் அரசைப் பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது! வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். அவர்களின் கண்ணீர் - ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர்! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதையும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தெம்போ - திராணியோ இல்லாமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார்.

பா.ஜ.க தன்னுடன் இருக்கிறது என்று இப்போதும் வாய்த் துடுக்கோடு பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசிக்கொண்டு இருக்கிறார்! கொள்கையில்லாமல் தொடைநடுங்கும் பழனிசாமி அவர்களின் தரத்தை மக்களே எடை போட்டுக்கொள்வார்கள் என்று நானும் விட்டுவிட்டேன்!

ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.-வை அடகு வைத்திருக்கிறார்! “திராவிடம் என்றால் என்ன?” என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்குத் தெரியாது என்று சொன்ன அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு அ.தி.மு.க. தொடங்கியபோது தங்களின் கொள்கை, ‘அண்ணாயிஸம்’ என்று சொன்னார்கள்.

அதை இப்போது பழனிசாமி அவர்கள் ‘அடிமையிஸம்’ என்று மாற்றி, ‘அமித்ஷாவே சரணம்’ என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார்.

“முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு?” என்று கேட்பார்கள். அதைப்போல நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று கேட்கிறார்கள்.

இதில் அவரின் தரம்தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா?

ஆனால், மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் – கடமையும் நமக்கு இருக்கிறது! அதுவும், வெறும் சொல்லால் அல்ல; செயல்களாலும் திட்டங்களாலும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் - விடியல் பயணத் திட்டம் - காலை உணவுத் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் – தமிழ்ப்புதல்வன் திட்டம் - நான் முதல்வன் திட்டம் - மக்களைத் தேடி மருத்துவம் - இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 - ஊட்டச்சத்தை உறுதிசெய் - தோழி விடுதி - கலைஞர் கனவு இல்லம் - உங்களுடன் ஸ்டாலின் - நலம் காக்கும் ஸ்டாலின் - தாயுமானவர் திட்டம் – அன்புக்கரங்கள் என்று லிஸ்ட் பெரிதாக இருக்கிறது!

இதன் பலன்களைப் பற்றி, நான் சொல்வதைவிட இதனால் பயன்பெறும் கோடிக்கணக்கான மக்களே தினமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!

அதுமட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேராக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்! தொகுதி மறுவரையறை என்று சொன்னவுடனேயே, அதை எதிர்த்து நிற்கிறோம்! கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால், சட்டரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம்!

முக்கியமாக, மாநிலங்கள்தான் வலிமையான நாட்டுக்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, மத்திய அரசு இல்லை; ஒன்றிய அரசு என்று அழுத்திச் சொல்கிறோம்!

இப்படி, போராடிப் போராடித் தமிழர்களை - தமிழ்நாட்டை தலை நிமிர்த்துகிறோம்! இப்படி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம்! அதனால்தான் சொல்கிறேன்... பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பட்டாளமே... தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... தனிநபர்கள் தோன்றுவார்கள் - மறைவார்கள்;

கட்சிகள் – வரும் போகும், ஆனால், தமிழ்நாட்டின் தனிப்பெருமை நிரந்தரமானது! தமிழ்மொழியின் சீரிளமை நிரந்தரமானது! நம்முடைய மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும்! இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது! இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது! டெல்லி நம்மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

ஒன்றா – இரண்டா..?

இந்தி மொழியைத் திணிக்கிறார்கள்! நம் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள்! கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையையே பறிக்கிறார்கள்!

ஆனால், அந்நாளும் சரி - இந்நாளும் சரி - எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! ஆதிக்கத்துக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! திணிப்புக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! மொத்தத்தில் இங்கே பா.ஜ.க.வுக்கு நோ எண்ட்ரிதான்! ஏன் என்றால், இது பெரியார் – அண்ணா – கலைஞர் - செதுக்கிய தமிழ்நாடு!

மூன்று முறை ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்களுடைய மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே... இன்னுமா எங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை?

இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த முப்பெரும் விழாவை டி.வி.யில் - சோஷியல் மீடியாவில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்கிறேன்... தலைமுறை தலைமுறையாக நாம் போராடி - எத்தனையோ பேர் உயிரையே தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமதிக்கலாமா?

பா.ஜ.க.-வை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கனவே, காஷ்மீரில் அதற்கு ட்ரையல் பார்த்துவிட்டார்கள். எப்படி, இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்று ஒரு நிலை உருவானபோது, தமிழ்நாடு போராடி, மொழிப்போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோன்று இப்போது ஒரு உரிமைப்போரை நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது!

இதை நாம் செய்யவில்லை என்றால் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? இதற்குப் போராடவில்லை என்றால் வேறு எதற்குப் போராடுவது? இதுதான் முக்கியம்! இந்தப் போராட்டத்தில் முன்கள வீரனாக உங்களுடன் 23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயிலுக்குச் சென்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்!

இந்த மேடையில் நின்று உறுதியோடு சொல்கிறேன்...

நம்முடைய தாய்மார்கள் – சகோதரிகள் – உழவர்கள் – இளைஞர்கள் – உழைப்பாளர்கள் என்று அனைவரின் நலனையும் காக்கத் தொடர்ந்து உழைப்பேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் – ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானதை, தொடர்ந்து பார்த்துப் பார்த்து செய்து கொடுப்பேன். நமக்குத் துணையாக தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் விதைத்த இனமான உணர்வு இருக்கிறது!

எட்டுக் கோடித் தமிழ் மக்களின் ஆற்றலும் ஆதரவும் நமக்குப் பக்கபலமாக இருக்கிறது! இதே உறுதியுடன் போராடுவோம்!

இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கான போராட்டமோ - முதலமைச்சர் என்ற பொறுப்புக்கான போராட்டமோ - ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டமோ அல்ல! இது தமிழ்நாட்டுக்கான போராட்டம்! இதற்குத் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும்!

இந்தக் கரூர் மண்ணில் நின்று, தந்தை பெரியார் பிறந்தநாளில் உரக்கச் சொல்வோம்... “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!” டெல்லிக்குக் கேட்பது போன்று, அனைவரும் சேர்ந்து சொல்ல வேண்டும். “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”.

விடைபெறுவதற்கு முன்னர், அனைத்து தோழர்களுக்கும் அன்பான வேண்டுகோள்! பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் உடன்பிறப்புகள் அனைவரும் உங்கள் ஊருக்கு, வீட்டுக்குப் பத்திரமாக திரும்ப வேண்டும். அதிவேகப் பயணங்கள் வேண்டாம். பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்…

நன்றி! வணக்கம்!

Also Read: ”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!