Politics

“தமிழ்நாடு மக்களுக்கு எப்போது உரிய நிதி கிடைக்கும்?” : சாதனையை சுட்டிக்காட்டி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

இந்திய அளவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் ஒன்றிய அரசின் நிதி வஞ்சிப்பிற்கு ஆளாக்கப்படும் வேளையிலும், வஞ்சிப்பைக் கடந்து தரமான மற்றும் சரியான நிர்வாகத்தால் பல துறைகளில் முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருகிறது தமிழ்நாடு.

அவ்வகையில், கல்வி, பொதுப்பணி, மருத்துவம் என பல துறைகளுக்கு ஒன்றிய அரசு முறையான நிதி வழங்காத நிலையிலும், வழங்கிய நிதியை மிகச்சரியாக பயன்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

குறிப்பாக, எளிய மக்களின் பொருளாதார உதவிகரமாக விளங்கும், 100 நாள் வேலைத்திட்டத்தை இந்திய அளவில் சரியாக கையாளும் மாநிலம் என்ற சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

இதனை சுட்டிக்காட்டி அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “ஒன்றிய அரசின் தொடர் நிதி வஞ்சிப்புக்கு இடையிலும் தமிழ்நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்திய அளவில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகளவில் சரியாக பயன்படுத்திய பெருமையும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதில் கூடுதல் சிறப்பு, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில்தான் பெருவாரியான மகளிர் பணியாற்றுகின்றனர்.

ஒன்றிய அரசின் அளவான நிதிகளையும் சரியாக பயன்படுத்தி, இதர மாநிலங்களுக்கும் நிதி வழங்கி வருகிறோம். இது அனுபவமிக்க ஆளுமையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியால்தான் சாத்தியமாகியுள்ளது. நலத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழு மனதோடு செயல்படுபவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு, இந்திய அளவில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக விளங்கி வருகிறது. எனினும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தகுந்த நிதி தர மறுத்து வருகிறது. இன்னும் எத்தனை வழிகளில் தமிழ்நாடு சிறந்து செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய நிதி கிடைக்கும்?” என தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Also Read: “இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட OBC மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை!” : பி.வில்சன் பெருமிதம்!