Politics

“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!

கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து வரும் திங்கள்கிழமை (ஜூலை 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த சூழலில் இன்று (ஜூலை 12) செய்தியாளர்களை சந்தித்த பேசிய திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி இதுகுறித்து பேசியதாவது :-

"திமுக மாணவரணி சார்பில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 14) கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை காவு வாங்க துடிக்கும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராக செயல்படும் பாஜக வஞ்சக செயலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற முழக்கத்துடன் ஏழை, எளிய அனைத்து தரப்பு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை கொடுக்க பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வருகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, தனது பதவி, கூட்டணி சுகத்திற்காக தனது எஜமானின் (பாஜக) உத்தரவின்படி தமிழ்நாட்டு கல்வி நிலையங்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.

இந்து அறநிலையத்துறை கல்வி நிலையங்களில் சதி நடக்கிறது என ஆர்.எஸ்.எஸ். போல மத கலவர புத்தியை மூளைக்குள் ஏத்திக் கொண்டும், தலையாட்டி பொம்மை போல கோவையில் தனது கருத்துகளை பேசியுள்ளார் பழனிசாமி. ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2,500 கோடி கல்விக்கான நிதியை வழங்காத நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் கல்வி நிதி குறித்து தனது முதலாளியிடம் (பாஜக) கேட்டு பெற்றுத்தர எடப்பாடி பழனிசாமிக்கு திரானி இல்லை. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கூட மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய பாஜக அரசு கொடுக்கவில்லை. அப்போது திமுக போராடியது, அதன் விளைவாக நிதி பெறப்பட்டது.

தமிழ்நாட்டு உரிமைகளை கேட்காத எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அறிவித்த ஒரே வாரத்தில் பாஜக தலைவர்களை பங்காளிக்களாக நினைத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். இந்து அறநிலையத்துறையில் கல்வி வழங்குவது சதி என்கிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்க தியாகத்தால் வந்த கல்வியை அழிக்கப் பார்க்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி கல்வியை சிதைக்கும் கூட்டணி என்று இதன் மூலமாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

பல இயக்கங்கள் போராடி பெற்று கொடுத்த கல்வியை, நடிகர் விஜய் ரூ.5 ஆயிரம் கல்வி உதவி தொகை என வழங்கும் புகைப்படம் எடுத்துக் கொள்வது அறமற்ற செயல். இந்தி திணிப்பை எதிர்த்து போராடி, தமிழ் தனித்து நின்றதால் விஜய் இன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து 200 கோடி வாங்குகிறார். ஒரு வேளை பீகார், உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்திருந்தால் விஜய் இங்கு பானிபூரி மட்டுமே விற்பனை செய்ய வந்திருப்பார்."

Also Read: முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !