Politics

”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது.

இந்த வன்முறையால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.

மணிப்பூர் மாநிலம் இப்படி இருக்க, அங்கு ஒருமுறை கூட சென்று அமைதியை திரும்ப பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்தியா வந்துள்ள பிரதமர் மோடி, மணிப்பூருக்கு எப்போது செல்வார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம், கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள பிரதமர் மோடி, தற்போதாவது சிறிது நேரம் ஒதுக்கி, மணிப்பூருக்கு செல்வாரா?

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை, இதுகுறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்வாரா?, பேரிடர்களால் பாதித்துள்ள இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் நிவாரணப் பணிகள் மோடி கவனம் செலுத்துவாரா?. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பாரா? என்றும் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

Also Read: ”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!