Politics

"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எப்படியாவது பிரித்து விட முடியாதா என படாத பாடுபட்டு வரும் நாக்பூர் குருபீடத்தின் சிஷ்யர்கள் வீட்டு அடிமைச் சேவகர் பழனிசாமி, முயற்சியில் தோல்வியை தழுவி சித்தம் கலங்கி, ஊர் முனைகளில் உலரி வருகிறார் என CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அஇஅதிமுகழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியார், தனது சொந்த மூளையில் சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர், அஇஅதிமுக ஆட்சி ஊழல் புதை சேற்றில் மூழ்கி, பாஜக ஒன்றிய அரசின் கொட்டடியில் அடைக்கப்பட்ட அடிமையாக இருந்த போது, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முன் வைத்த “தமிழகத்தை மீட்போம்“ என்ற அரசியல் முழக்கத்தை, இன்று காலப் பொருத்தம் இல்லாமல் முழங்கி வருகிறார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எப்படியாவது பிரித்து விட முடியாதா என படாத பாடுபட்டு வரும் நாக்பூர் குருபீடத்தின் சிஷ்யர்கள் வீட்டு அடிமைச் சேவகர் எடிப்பாடியார், முயற்சியில் தோல்வியை தழுவி சித்தம் கலங்கி, ஊர் முனைகளில் உலரி வருகிறார்.இவரது கட்சியின் நிறுவனத் தலைவருக்கு, அரசியல் தளத்தில் களம் அமைத்து, நிரந்தர முகவரி பெற்று தந்தது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி என்பதை அவர், வாழ்நாள் முழுவதும் பெருமைபட கூறி வந்தார் என்பதை தமிழக மக்கள் நன்கறிந்த வரலாற்று உண்மை.

பாரதிய ஜனதா கட்சியோடு, இனி எந்தக் காலத்திலும் அஇஅதிமுக கூட்டணி அமைக்காது என பெருந்திரளாக கூடிய, மக்கள் மன்றத்தில் உறுதியளித்த, இவரது குலவிளக்கு “அம்மா”வின் வார்த்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மோடி - ஷா கூட்டணிக்கு கூழைக் கும்பிடு போட்டு ஓடியது யார் என்பதை நாடு மறந்துவிடவில்லை.

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் ஜிஎஸ்டி வரி, உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம் எல்லவற்றையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்த “அம்மா” சமாதியின் ஈரம் காயும் முன்பு, இடுப்பில் துண்டு கட்டி, வாய் முடி, ஒன்றிய அரசு நீட்டிய தாள்களில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழகத்தை வஞ்சித்து, மக்களுக்கு துரோகமிழைத்த எடப்பாடியார், உரிமைக்காக போராடும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அதன் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பற்றி பேசுவதற்கு தகுதிபடைத்தவரா என்பதை ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முகவரி இழப்பது யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு நாவடக்கம் தேவை என்பதை காலத்தில் எச்சரிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: ஜானகி vs கேரளா ஸ்டேட்: முடிவுக்கு வந்த பிரச்சினை- தணிக்கை குழுவின் கோரிக்கை ஏற்பு- புதிய படத்தலைப்பு என்ன