Politics
"ஒன்றிய அரசால் வேட்டையாடப்படும் கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்"... சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!
கீழடி அகழாய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோத போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதனிடையே கீழடி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஆய்வாளர் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒன்றிய அரசால் வேட்டையாடப்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்றைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு ஆவணப்படுத்தும் பிரிவிற்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு அதிகாரி பணியிடமாற்றம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எட்டு ஆண்டுகளாக கீழடி அகழாய்வு குறித்து எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர்.
அப்படிப்பட்டவரை அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017 ஆம் ஆண்டு அவரை ஒன்றிய அரசு வெளியேற்றியது. அவர் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் அறிக்கையை இன்னொரு அதிகாரி எழுத உத்தரவிட்டது. அதற்குப்பின் நீதிமன்றத்தை நாடிய பின்னர்தான் அகழாய்வு செய்த இடத்தை அகழாய்வு செய்தவர்தான் எழுதவேண்டும் என்று கூறியபின் கீழடி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதற்குப் பிறகு கூட அவரை சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தை நாடியபின்னரே அவர் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு கீழடி ஆய்வு அறிக்கையை எழுதி ஒப்படைத்தார். தற்போது அவர் ஆவணப்படுத்தும் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடி ஆய்வை நடத்தியதற்காக ஒரு ஆய்வாளர் எப்படி எல்லாம் வேட்டையாடப்படுவார் என்பதற்கு இதுவே உதாரணம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!