Politics

"ஒவ்வொரு தாக்குதலுக்கும் மதச்சாயம் பூசப்படுவது நிறுத்தப்பட வேண்டும்" - செல்வப்பெருந்தகை !

காஷ்மீர் மாநிலம் பஹால்காம் பைசார் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் பலியான 27 பேரில் ஒருவரான ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் மதுசூதனன் ராவ் அவர்களின் உடல் டெல்லியில் இருந்து விமான மூலமாக ஹைதராபாத் மார்க்கமாக சென்னை வந்தடைந்தது.

சென்னை வந்தடைந்த மறைந்த மதுசூதனன் ராவ் அவர்களின் உடலுக்கு பழைய விமானம் நிலையம் வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி அர்ஜுன்சிங் தலைமையில் பாதுகாப்பு படையினர் வீரவணக்கம் செலுத்தி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர், பின் அவரின் உடலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தோளில் சுமது அமரர் ஊர்தியில் ஏற்றி, அவரின் சொந்த ஊரான நெல்லூருக்கு அனுப்பி வைத்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையால் அளிக்கப்பட்ட வீரவணக்கத்திற்கு பிறகாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தி, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பயங்கரவாதிகளின் இந்த செயல் என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசு பயங்கரவாதிகளை வன்மையாக தண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் வீர மரணம் அடைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மதுசூதனன் ராவ் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையும், அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தோம். இந்தியாவிலேயே முதலாக இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீட்க வேண்டும் என குழுவினை அமைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மேலும் இதற்காக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்.

பயங்கரவாதிகளுக்கு மதம் இனம் என்ற அடையாளமே கிடையாது. பயங்கரவாதி என்றால் அவன் பயங்கரவாதி தான். எந்த ஒரு மத நூல்களிலும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் இல்லை.ஒவ்வொரு தாக்குதலுக்கும் மதச்சாயம் பூசப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அமைதியாக இருக்கும் மக்களிடம் பிளவுபடுத்தும் நடவடிக்கையை யாராக இருந்தாலும் நிறுத்த வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லாவை அழைக்காதது என்பது பிளவுபடுத்தும் எண்ணம்தான். இதைத்தான் நிறுத்த வேண்டும் என கூறுகிறேன்.

Also Read: வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு : எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி!