Politics

பசு மாட்டிற்கு கூட தாங்காத வந்தே பாரத் ரயில்! : தேசிய அளவில் வலுக்கும் கண்டனங்கள்!

இந்தியாவிலேயே சிறந்த ரயில் என ஒன்றிய பா.ஜ.க அரசால், விளம்பரப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில்கள், பாதுகாப்பில் கடும் பின்னடைவில் உள்ளது என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையமே ஒப்புகொண்டுள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “வந்தே பாரத் ரயிலின் எடையானது, இதர ரயில்களின் எடையைவிட மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ரயில் வேகமாக செல்லும் போது, பசுக்கள் குறுக்கிட்டாலும், வந்தே பாரத்திற்கு கடுமையான சேதம் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் சேவை, கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில், வந்தே பாரத் ரயில் மீது பாதுகாப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதிலும், ரயிலுக்கு நீலத்திலிருந்து, காவியில் வண்ணம் தீட்ட செலுத்தப்படும் கவனம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “வந்தே பாரத் ரயில், பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு விபத்துக்குள்ளாக வாய்ப்பு என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே” என பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்படுகின்றன. எனினும், இக்குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்ளாமல், ரயில் நிலையங்களில் மோடி செல்ஃபி நிலையங்கள், காவி நிறத்திலான ரயில்கள், இந்தியில் ரயில்களின் பெயர்கள் போன்ற நடவடிக்கைகளையே தீவிரமாக செய்து வருகிறது பா.ஜ.க.

Also Read: துணை வேந்தர்கள் மாநாடு : “ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" - செல்வப்பெருந்தகை ஆவேசம்!