Politics
“மாணவர்களிடம் மதவெறியைத் தூண்ட முயல்கிறார் ஆளுநர் ரவி...” - தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம்!
மதுரையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஒன்றில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க தலைமை விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டார். அதன்படி நேற்று (ஏப்.12) அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஆளுநர் ரவி உரையாற்றும்போது, அங்கிருந்த மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் போட வற்புறுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் விழிப்பிதுங்கிய மாணவர்கள், பின்னர் ஆளுநர் மூன்று முறை கோஷம் எழுப்பியதையடுத்து வேறு வழியின்றி மாணவர்களும் திரும்ப கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், மதச்சார்பின்மையை கற்றுக்கொடுக்கும் கல்லூரியில், மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் போட வற்புறுத்திய ஆளுநர் ரவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :
மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பேசி முடித்ததும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன், மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படியான பொறுப்பில் உள்ள ஒருவர், அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறான மதச்சார்பின்மை க்கு எதிராகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்; அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்; ஆற்ற வேண்டிய கடமையைக் காலத்தே ஆற்றத் தவறுகிறார்; மாணவர்களிடம் மதவெறியைத் தூண்ட முயலும் கடைநிலை இந்துத்துவ வெறியராகவே வலம் வருகிறார்.
உச்சநீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கிய பிறகும், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையிலான தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்திச் செயல்படுத்திக் கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதையும், சமூகநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது. கல்வித் துறைக்கும் இவருக்கும் தொடர்பில்லை என்ற நிலை உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்ட பிறகும், இவரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவோர் யார் என மக்கள் அடையாளம் காணவேண்டும்.
இத்தகைய மதவெறியர் ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலையைத் தவிர்க்க முடியாது என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!