Politics

பா.ஜ.க. ஆட்சி எப்படி கொடூரமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் உ.பி. ஆதித்யநாத் அரசுதான் - முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (01-04-2025)

ஆதித்யநாத் பேசலாமா ?

தமிழ்நாடு முதலமைச்சர் மொழியால் பிரிவினைவாதம் செய்கிறாராம் சொல்கிறார் உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத். வாயைத் திறந்தால் மக்களைப் பிரிவினைப்படுத்தும் சொல்லையே பேசி, செயல் செய்தால் பிரிவினைச் செயல்களையே செய்யும் ஆதித்யநாத், 'பிரிவினை' பற்றி எல்லாம் பேசலாமா? அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா?

அவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்னால் அவர் மீது வைக்கப்பட்ட ‘கலவரத்தை தூண்டினார்' என்ற குற்றச்சாட்டை வைத்து, அவருக்கு அதுவரை தரப்பட்டு இருந்த இசட் பிரிவு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது. அத்தகையவர்தான் இன்று இந்தியாவுக்கு அறிவுரை சொல்லும் இடத்துக்கு வந்திருக்கிறார். அவர் மீது எத்தனை விதமான வழக்குகள் இருக்கிறது என்பதை அவரே சொல்லட்டும். அல்லது, 'என் மீது எந்த. வழக்கும் இல்லை' என்று சொல்லும் தைரியம் அவருக்கு உண்டா?

'அவர்கள் ஒரு இந்துவை எடுத்துக் கொண்டால், நாங்கள் நூறு முஸ்லீமை எடுத்துக் கொள்வோம்' என்று பேசிய சைவ பட்சி இவர். மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதன் மூலமாக ஒட்டுமொத்த மக்கள் அனைவர் மனதிலும் பீதியைக் கிளப்பியவர் அவர்தான்.

“நூறு இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக உணரும். ஆனால் 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்காது” என்று சமீபத்தில் பேட்டி அளித்தவர் தான் இவர். எந்தத் தரப்பாக இருந்தாலும் அந்தத் தரப்புக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முதலமைச்சரான அவர்தானே! பேச்சுச் சுதந்திரத்தை பிறப்புரிமையாகக் கொள்ளக் கூடாது என்று சொல்லி இருப்பவரும் அவர்தான். அதே பேச்சுச் சுதந்திரத்தை வைத்து கடந்த காலங்களில் அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் குற்ற வழக்கு களுக்கு தகுதி உடையவை அல்லவா?

தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க அவர்கள் மீது வழக்குகள் போட்டு, அவர்களது வீடுகளை இடிப்பதையே சட்டபூர்வமாகச் செய்து வந்தார் ஆதித்யநாத். இதே பாணியை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசமும், குஜராத்தும், அரியானாவும் பின்பற்றியது. இந்தியாவில் புதிய பாணியை புகுத்தியவர் அவர்.

அவர் ஆட்சி நடத்தும் லட்சணம்தான் இந்தியாவே பார்த்துச் சிரித்ததே. 'எங்கள் மாநிலத்தில் கொரோனாவில் யாருமே இறக்கவில்லை' என்று சொன்னவர் ஆச்சே அவர்? 'இதற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டால், 'கொரோனா பற்றிய எந்தக் கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டாம்' என்று சொல்லி விட்டவர் அவர்.

உத்தரப்பிரதேச மாநில இளைஞர் நாடாளுமன்ற விழாவில் உரையாற்றிய ஆதித்யநாத், “ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் நல்லாட்சி நிகழ்கிறது. மூவரும் இணைந்து செயல்படும் போது தான் அது நல்லாட்சியின் இலக்கை அடைய உதவுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த மூன்று தூண்களால் இயக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார். உடனே அதற்காக பின்னூட்டம் இட்ட, அந்த மாநில மக்கள், 'நீங்கள் நடத்துவது நல்லாட்சியா?' என்று கேட்டிருக்கிறார்கள்.

‘இந்தியாவிலேயே அதிகளவிலான குற்ற வழக்குகள் பதிவாகும் மாநிலம் உ.பி.தான். 2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவான 35 லட்சம் குற்ற வழக்குகளில் 4 லட்சம் வழக்குகள் உத்திரப் பிரதேசத்தில் பதிவானவை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65,743” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஆதித்யநாத் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தை அவரது மாநிலத்தைச் சார்ந்தவர்களே அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

கும்பமேளாவின் போது ஒரு படகோட்டி ரூ.30 கோடி சம்பாதித்ததாக உ.பி. சட்டமன்றத்தில் ஆதித்யநாத் சொன்னார். அவர் சொன்ன படகோட்டி மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. மஹ்ரா என்ற படகோட்டி மீது கொலை, கொலை முயற்சி, கலவரம், துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகள் இருப்பதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் பேட்டி அளித்துள்ளார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது ஆட்சியின் மீது குறை சொல்லி வருகிறார்கள். அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஆஷிஷ் படேல், லோனி சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர், பதேஹி சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், லக்கிம்பூர் கேரியின் சட்டமன்ற உறுப்பினர் என்று பலரும் உ.பி. ஆட்சியை விமர்சித்து வருகிறார்கள்.

“தொழில்நுட்பக் கல்வித் துறையில் ஊழல் நடக்கிறது. இது தொடர்பாக எந்த விசாரணை வைத்தாலும் அதில் நான் வந்து சொல்லத் தயாராக இருக்கிறேன்” என்று அமைச்சர் ஆஷிஷ் படேல், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். “காவல் நிலையங்கள் ஊழல் நடக்கும் கூடங்களாக மாறிவிட்டன" என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான நந்த் கிஷோர் சொல்லி இருக்கிறார். 'லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்' என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. தீனாநாத் பாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். பணம் கேட்டவர் எந்த அதிகாரி என்பதையும் இவர் சொல்லி இருக்கிறார்.

இதை வைத்து பி.பி.சி. நிறுவனம் பல்வேறு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுத்துள்ளது. மூன்று பா.ஜ.க. உறுப்பினர்கள் இதனை உறுதி செய்துள்ளதாக அந்த நிருபர் எழுதி இருக்கிறார்.

கோடிக்கணக்கான மக்கள் கூடிய விழா என்று சொல்லப்படும் கும்ப மேளாவில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற கணக்கே இல்லை. இதுதான் ஆதித்யநாத் ஆட்சி.

உத்தரப்பிரதேசத்தில் போலே பாபா என்ற சாமியார் சொற்பொழிவை கேட்க வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினார்கள்.. 121 பேர் மரணம் அடைந்தார்கள். அப்போது எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாதவர்தான் ஆதித்யநாத். ஒப்புக்கு ஆறு பேரை கைது செய்துவிட்டு, போலே பாபாவை விட்டுவிட்டதுதான் பா.ஜ.க. அரசு. போலே பாபா மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி எப்படி கொடூரமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் உ.பி. ஆதித்யநாத் அரசு ஆகும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் 33 இடங்களை மட்டுமே வென்றவர் ஆதித்யநாத். அந்த மாநிலத்து மக்களிடம் எத்தகைய வெறுப்பை அவர் வாங்கி வைத்துள்ளார் என்பது இதில் இருந்து தெரிகிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் அறிவுரை சொல்ல வரத் தேவையில்லை.

Also Read: ”உலக அளவில் கவனம் ஈர்த்த மு.க.ஸ்டாலின்” : The Straits Times-ல் முதலமைச்சரை பாராட்டி கட்டுரை வெளியீடு!