Politics

"இரண்டாவது இடத்திற்குதான் போட்டி, நாம்தான் எப்போதும் ஆளுங்கட்சி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு, நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இனியதொரு நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று உங்களையெல்லாம் சந்தித்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும் நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் நம்முடைய மாவட்டக் கழகத்தின் செயலாளர் செயல்வீரர் சேகர்பாபு அவர்களுக்கும், இந்த வட்டாரத்தின் கழக நிர்வாகிகளுக்கும், இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைய இருக்கும் வளர்ச்சிக்கு வலுவான – அழுத்தமான – கம்பீரமான அடித்தளம் அமைக்கும், ‘எல்லாருக்கும் எல்லாம்’ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத் தொடர் நடக்கும் வேளையில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சில நாட்களுக்கு முன்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஏற்பாடு செய்த இப்தார் விழாவில் நான் கலந்துகொண்டேன். அடுத்து, இப்போது நம்முடைய கொளத்தூரில் உங்களுடன், "ஒருவருக்கொருவர் நலம் செய்வோம், உள்ளத்து அன்பால் ஒளி செய்வோம்" எனும் இந்த ரமலான் நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்திருக்கிறேன். இங்கே நான் சிறப்பு விருந்தினராக வந்திருப்பதாக பேராயர் பேசுகிறபோது குறிப்பிட்டார் – நான் சிறப்பு விருந்தினர் அல்ல, என் கொளத்தூர் தொகுதி விருந்து இது.

இன்று நேற்று அல்ல, கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2,500 பேருக்கு ரமலான் பரிசுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொள்ளும் விழாவாக - நம்முடைய சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் விழாவாக, இது அமைந்திருக்கிறது.

நமக்கு அருகில் ஒருவர் பசியுடன் இருக்கும்போது, நாம் மட்டும் வயிறு நிறைய சாப்பிடக் கூடாது, வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக கொடுக்க வேண்டும் என்று மனிதநேயத்தையும், அன்பையும் போதிக்கும் சமயம், இஸ்லாம்.

நல்லிணக்கத்தை விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களையும் - தி.மு.க.வையும் யாரும் பிரிக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுவதாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்தார் விழாக்களைப் பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை நடக்கும்போது வாயைத் திறக்க மாட்டார்கள். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டமாக இருந்தாலும், காஷ்மீருக்கான

370-ஆவது பிரிவை ரத்து செய்வதாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எது நடந்தாலும் முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருப்பது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இப்போது கூட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் தி.மு.க. சார்பாக நாம் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு வருகிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இஸ்லாமியரை வஞ்சிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, நம்முடைய அரசின் நிலைப்பாட்டை நாம் தெளிவாக அறிவித்திருக்கிறோம்!

இந்தத் தீர்மானத்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் - உலக அளவிலும் இருக்கும் பல்வேறு இந்திய முஸ்லீம் அமைப்புகள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள், நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால், தீர்மானத்தில் கூட எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று உங்களுக்கு தெரியும். இரவோடு இரவாகத் திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றார் ஒருவர், அவர்தான் எதிர்கட்சித் தலைவர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் அமித்ஷா-வைச் சந்தித்திருக்கிறார், இதுதான் முக்கியம்.

மறுநாள் இந்தத் தீர்மானத்தை நாம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்தும் சட்டமன்றத்துக்கு வரவில்லை. இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான். இதில் வேடிக்கை என்ன என்றால், இன்றைக்கு கூட மாலையில் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். அடுத்து நாங்கள்தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள். இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே, இப்போது இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்திற்கு வரப்போகிறோம்; நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் – அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு – மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்.

எனவே, இந்தத் தீர்மானத்தை கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்து, அவர் டெல்லிக்குப் பறந்து, இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இருக்கும் ஒரு பொறுப்பில் இருக்கும் அமைச்சரைச் சந்தித்து வருகிறார்.

எனவே, அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ன செய்வது என்று முழிக்கிறார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் வருகிறதே, ஏற்கனவே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை மொத்தமாகப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அந்தக் கட்சியுடன் தொடர்பு வேண்டாம் என்று நாம் அறிவித்திருக்கிறோம். இருந்தாலும் இன்றைக்கு டெல்லிக்கு சென்று இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதே, இப்போது என்ன செய்வது? இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்று சட்டமன்றத்தில் நடைபெறும் காட்சிகளை எல்லாம் பார்க்கிறோம். ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். வெளியில் செல்கிறார்கள்; யாரிடமோ போனில் பேசிவிட்டு வருகிறார்கள். என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

அதற்குப் பிறகு, ஒப்புக்கு என்று சொல்வார்களே, அதுபோன்று நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள். அப்போது நான் அதற்கெல்லாம் நன்றி சொல்லிப் பேசினேன். அப்போது, இதே அவையில் ஏற்கனவே இருமொழிக் கொள்கை பிரச்சினை பற்றி பேசியபோது, மும்மொழிக் கொள்கை வேண்டாம்; இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டிற்குத் தேவை என்று ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து பேசினோம். அப்போது நான் சொன்னேன், ஒருவர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அந்தச் செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது. யாரைச் சந்திக்க சென்றிருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது. அவ்வாறு செல்கிறபோது, எதுவேண்டுமானாலும் பேசுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் கூட்டணி அமைக்கிறீர்களோ, அமைக்கவில்லையோ, அது உங்கள் சொந்தக் கட்சி பிரச்சினை. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டுப் பிரச்சினையாக இருக்கும் இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்திப் பேசிவிட்டு வாருங்கள்... நீங்கள் இங்கே ஆதரித்தால் மட்டும் போதாது. அங்கு பேசிவிட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவரும் பேசிவிட்டு, மறுநாள் சென்னை திரும்பியிருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள், இருமொழிக் கொள்கைப் பற்றி பேசிவிட்டீர்களா? இருமொழிக் கொள்கைப் பற்றி அழுத்தமாகப் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொன்னேன்.

அதேபோல, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்சினை குறித்தும் நீங்கள் பேச வேண்டும். மறுபடியும் டெல்லிக்கு சென்று பேசிவிட்டு வர வேண்டும் என்று சொன்னேன். இந்த நிலையில்தான் இன்றைக்கு எதிர்க்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, இன்றைக்கு இப்தார் கொண்டாடுகிறவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று உங்களுக்கு தெரியும்.

இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும் – இல்லை என்றாலும், அதை எதிர்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகம். இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சி, இட ஒதுக்கீடு மூலமாக அவர்களுக்கான சமூகநீதி எல்லாம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இன்றைக்கு இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நேரம் 6.24 ஆகிவிட்டது. எனவே இதற்குமேல் நான் பேசுவது முறையாக இருக்காது. எனவே, நானும் உங்களோடு சேர்ந்து இந்த இனிய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைந்து, உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்! "என்று கூறினார்.

Also Read: கோவில் திருவிழாக்களில் சாதி பெயருக்கு தடை, சாதிக்கு ஒரு நாள் என ஒதுக்கக்கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு!