Politics
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு : முதலமைச்சரின் தலைமையில் கூடும் அகில இந்திய தலைவர்கள் !
2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். அதோடு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பிக்கள் பிற மாநில அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து இந்த கூட்டத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து , தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டுக்குழு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், பிஆர்எஸ், காங்கிரஸ், அகில இந்திய முஸ்லீம் லீக், திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!