Politics

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு... இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம் அறிவிப்பு!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் இந்த செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மாநிலங்களை தொடர்ந்து குறிவைத்து நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை கொடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகளுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையிலும் கண்டுகொள்ளாத பாஜக, தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி நிதியை தர மறுத்ததோடு, அந்த நிதியை பாஜக ஆளும் மற்றும் அதன் கூட்டணி மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர் குரலை எழுப்பி வரும் நிலையில், தற்போது இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்! உரிமைகளை மீட்போம்!

தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்; பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!

அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” பிப்ரவரி 18 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம்! தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம்!

ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!!

உரிமைகளை மீட்போம்!!

=> துரைமுருகன்

பொதுச்செயலாளர்

தி.மு.க.

=> ஆசிரியர் கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

=> கு.செல்வபெருந்தகை

தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

=> வைகோ

பொதுச்செயலாளர்,

ம.தி.மு.க

=> பெ. சண்முகம்

செயலாளர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்மாநிலக் குழு

=> ஆர். முத்தரசன்,

செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

தமிழ்மாநிலக் குழு

=> தொல். திருமாவளவன்

தலைவர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

=> கே.எம்.காதர்மொகிதீன்

தலைவர்,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

=> அருணாசலம்

பொதுச்செயலாளர்

மக்கள் நீதி மய்யம்

=> எம்.எச்.ஜவாஹிருல்லா

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி

=> ஈ.ஆர். ஈஸ்வரன்

பொதுச்செயலாளர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

=> தி.வேல்முருகன்

தலைவர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Also Read: “ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாட்டின் வரலாறே தெரியாது...” - இந்தி திணிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்!