Politics

தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சங்பரிவார்! : சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!

தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி பிளவுகளை உண்டாக்க நினைக்கிற இந்து முன்னணி, பா.ஜ.க அமைப்புகளுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலையும், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்க்காவையும் மையப்படுத்தி மிகவும் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்னிறுத்தியுள்ளது.

குறிப்பாக, ‘முருகன் மலையை காக்க திருப்பரங்குன்றத்திற்கு வருக’ என்று தனது அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களின் இறை நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிற பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அமைப்புகளின் பொய்ப்பிரச்சாரத்தை உணர்ந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள், இவர்களின் அழைப்பை முற்றிலுமாக புறக்கணித்து சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

இதனால், ஆத்திரமுற்ற மதவெறி சக்திகள் இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த அனைத்து பகுதி மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கும்பமேளா உயிரிழப்பு எண்ணிக்கையை ஏன் மறைக்க வேண்டும்?” : பா.ஜ.க அரசிற்கு அகிலேஷ் கேள்வி!