Politics

“தலைவர்களுக்கெல்லாம் தலைவர் தந்தை பெரியார்!” : அவதூறுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்கள் அனைத்திலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பங்காக, வடசென்னையை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்ற, வடசென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.6,350 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் தொடர்ந்து மேர்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 31) வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சிக்கு பின், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக சட்டப்பேரவையில் ரூ.1,000 கோடி முதலில் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தற்போது ரூ.6,350 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

அப்போது முதலமைச்சரிடம் பெரியார் குறித்து அவதூறு எழுப்புபவர்கள் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். எனவே, அவதூறுகளை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் விரும்பவில்லை” என பதிலளித்தார்.

கூடுதலாக ஆளுநர் குறித்த கேள்விக்கு, “அனைத்து நிலைகளிலும் அரசுக்கு எதிராகதான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள், திராவிட மாடல் ஆட்சியின் மதிப்பைக் கூட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அவரின் செயல்கள் தொடர்வதை தான் நாங்களும் விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

Also Read: ECR விவகாரம் : 6 இளைஞர்கள் கைது - 2 கார்கள் பறிமுதல்!