Politics

வக்ஃப் வரைவு மசோதாவை நிறைவேற்றினால் நீதிமன்றத்தை நாடுவோம் - திமுக எம்.பி ஆ.ராசா !

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த மசோதா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது. இந்த கூட்டுக்குழுவில் 572 திருத்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் பா.ஜ.க வழங்கிய 22 திருத்தங்களுக்கு மட்டும் நாடாளுமன்ற கூட்டக்குழு ஏற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது.

இதனை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான தி.மு.க MP ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றக்கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி வக்ஃப் வாரிய வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த மசோதாவில் பா.ஜ.க கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அளித்த திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்தி வக்ஃப் வரைவு மசோதாவை நிறைவேற்றினால் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "வக்ஃப் வரைவு மசோதா தொடர்பான 650க்கும் மேற்பட்ட பக்கங்களை வாசிக்க எம்.பிக்களுக்கு ஒரு இரவு மட்டுமே காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதையும் மீறி, எம்.பிக்கள் அவற்றை படித்துவந்து குறிப்புக்கள் எடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அவற்றை உதாசீனப்படுத்தி, மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே தீருவோம் என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றினால் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: துணை முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்தார் - பஞ்சாபில் இருந்து திரும்பிய கபடி வீராங்கனைகள் !