Politics
பதிவு புத்தக தபால் சேவை : “சிலைகளுக்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்க முடியும் என்றால்...” - வில்சன் MP !
கல்வியையும் வாசிப்பையும் பதிப்புப் பணியையும் ஊக்குவிக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த பதிவு புத்தக தபால் (Registered Book Post) முறையை எந்த ஆலோசனையும் அறிவிப்பும் இன்றி கடந்த டிசம்பர் 18ம் தேதி ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியுள்ளது. இந்த சேவை மூலம் பலரும் பயன்பெற்று வந்த நிலையில், சேவை நிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், கல்வியையும் - வாசிப்பையும் - பதிப்புப் பணியையும் ஊக்குவிக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த பதிவு புத்தக தபால் (Registered Book Post) சேவையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திடுமாறு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் X தள பதிவு வருமாறு :
டிசம்பர் 6, 2024 அன்று, ஒன்றிய அமைச்சர் அவர்கள், தபால் துறையின் நவீனமயமாக்கல் குறித்த பாராளுமன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார். இருப்பினும், இந்திய தபால் துறையின் மிகவும் மதிப்புமிக்க சேவைகளில் ஒன்றான பதிவு புத்தக தபால் சேவையை நிறுத்துவதற்காக முன்மொழியப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்திய தபால்துறையின் ஊழியர்கள் உட்பட பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் அல்லது முன்னறிவிப்புகள் ஏதுமின்றி இந்த சேவை டிசம்பர் 18, 2024 அன்று அஞ்சல் துறையின் மென்பொருளில் இருந்து திடீரென அகற்றப்பட்டுள்ளது.
இந்த பதிவு புத்தக தபால் சேவையின் வாயிலாக புத்தகங்கள், அட்டைகள், பத்திரிகைகள், அனைத்து வகையான வெளியீடுகள், காகிதம், தாள்கள், இரசீதுகள், விலைப்பட்டியல்கள், அறிக்கைகள், வணிக, சட்ட அல்லது தனிப்பட்ட இயல்புடைய எந்தவொரு ஆவணமும் ஒற்றை அல்லது பல பிரதிகளில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கணிசமான மலிவான விலையில் தபால் மூலம் அனுப்பப்பட்டது.
இந்த சேவையானது புத்தக வெளியீட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நூலகங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோருக்கு கூரியர் சேவைகளுக்கு மாற்றாக மலிவு விலையில் சேவைகளை வழங்கியது. அத்துடன் மானிய விலைகள் மூலம் வாசிப்பு கலாச்சாரத்தை வளர்க்க உதவியது. மேலும், இதழ்கள் மற்றும் பருவ இதழ்களுக்கு குறைந்த கட்டணத்தையும் வழங்கியது.
இந்த சேவையை நிறுத்துவது போக்குவரத்துச் செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பதிப்புத் துறை, புத்தக கடன் வழங்குபவர்கள், நூலகங்கள், வாசகர்கள் மற்றும் மாணவர்களில் பலரை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்த முடிவு இந்தியாவின் வாசிப்பு கலாச்சாரம் மற்றும் எழுத்தறிவு, கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை கடுமையாக அச்சுறுத்துகிறது.
ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அவர்களே, இதுபோன்ற முக்கிய சேவைகளை நீக்குவது பொருத்தமானதா? உங்கள் எண்ணங்கள் என்ன? இந்த சேவையை மீட்டெடுத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவீர்களா? புத்தக அஞ்சல் சேவையை நிறுத்துவதற்கான முடிவு எழுத்தறிவு மற்றும் கல்விக்கான நாட்டின் அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவைக் குறிக்கிறது.
அறிவைப் பெறுவதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாகும். மேலும் பதிவு புத்தக தபால் சேவைகள் தகவல்களைப் பரப்புவதை ஊக்குவிப்பதன் மூலம் அதை அணுகுவதற்கு உதவுகின்றன. இந்த சேவையை நிறுத்துவது நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், கல்வியறிவு விகிதத்தையும் பாதிக்கிறது.
ஆகையால், இந்த முடிவு கவலையளிக்கிறது. எனவே பிரதமர் அவர்கள் தயவுசெய்து இந்த அத்தியாவசிய சேவையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர ஆவண செய்ய வேண்டும். பல நூறு கோடி செலவில் சிலைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்க முடியும் என்றால், அறிவு மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான அணுகலை வழங்கிடும் அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் இது போன்ற சேவைகளை ஏன் ஆதரிக்கக்கூடாது?
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!