Politics

“பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?” -ஒன்றிய அரசின் இதழில் வந்த செய்திக்கு சு.வெ MP கண்டனம்

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்திய இரயில்வேயின் சேவையை நாட்டின் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக விளங்கும் இரயில்வே துறையை தனியார்மயமாக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேலும், இரயில்வேயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை நிறுத்தியுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் இரயில் பயணங்களின்போது சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, பெண் பயணிகளுக்கு 58 வயது ஆனவர்களுக்கு 50% பயண சலுகையும், 60 வயதான ஆண் பயணிகளுக்கு 40% பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், கொரோனா பேரிடர் காரணமாக மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை ஒன்றிய அரசு நிறுத்தியது. கொரோனா முடிந்தபின்னர் இது வழக்கம்போல வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக சலுகை வழங்கப்படவேயில்லை.

அதனை மீண்டும் வழங்கவேண்டும் என பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதனை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரின்போது ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான இரயில்வே சலுகை மீண்டும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது பறிக்கப்பட்ட சலுகை, மூத்த குடிமக்களே விட்டு கொடுத்ததாக ஒன்றிய அரசின் இதழில் வெளிவந்துள்ள நிகழ்வு கண்டனங்களை எழுப்பி வருகிறது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :

நான் நாடாளுமன்றத்தில் 2021 - 2024 மற்றும் 2025 நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை முறை மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளார்கள், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை திரும்ப பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு தொகை சேமிப்பாக கிடைத்துள்ளது என்ற கேள்வியை (231/13.12.2024) எழுப்பி இருந்தேன். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில் மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்துள்ளார்கள் என்ற விவரம் தரப்படவில்லை. மாறாக 2021 நிதியாண்டில் துவங்கி 2024 அக்டோபர் வரை மொத்த பயணிகள் 2230 கோடி முறை பயணித்துள்ளனர் என்று பதில் அளித்துள்ளார். 2022 - 23 ஆம் ஆண்டில் பயணிகளின் கட்டண சலுகையாக 57 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது சராசரியாக ரயில்வே கட்டணத்தில் 46 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வியின் நோக்கமே மூத்த குடிமக்கள் செய்கிற ரயில் பயணங்களின் விவரங்களை பெறுவதும், கோவிட் காரணத்தை பயன்படுத்தி திரும்ப பெறப்பட்ட மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகைகளின் காரணமாக எவ்வளவு தொகை அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது என்பதை அறிவதற்குதான்.

ஆனால் அமைச்சரோ வேண்டுமென்றே அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொத்த பயணிகள் எவ்வளவு, மொத்த மானியம் எவ்வளவு என்று கணக்குத் தந்துள்ளார். எல்லோருக்குமான மானியத்தைக் கடந்துதான் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆகவே அரசு இந்த கேள்விக்கான பதிலை தவிர்ப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் கட்டணச் சலுகை ரத்தானதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்கிற தகவலை மறைத்துள்ளது.

சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முடியாது; மூத்த குடிமக்கள் சம்பந்தமான தகவலை மறைப்பதன் மூலம் அவர்களின் கோபத்தையும் வடித்து விட முடியாது.

அதே நேரம், இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் “நியூ இந்தியா சமாச்சார்” இதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற இரயில்வே அமைச்சகம். பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது? அதுமட்டுமல்ல, பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும்.

Also Read: அனுமதி பெறாத Internet சேவை வழங்கும் நிறுவனங்கள், POLE-களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சி திட்டம்!