Politics

"அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது" - அமித்ஷாவின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் !

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிராக பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றது.

மேலும் பாஜக அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும்போதெல்லாம் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அம்பேத்கர் பெயரை குறிப்பிட்டு அதனை எதிர்த்து வருகின்றனர். இதனிடையே நேற்று அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அம்பேத்கர் பெயரை குறிப்பிட்டு அந்த மசோதாவை ராகுல்காந்தி எதிர்ப்பு பேசினார். மேலும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் அந்த அம்பேத்கர் பெயரை குறிப்பிட்டு மசோதாவை எதிர்த்து பேசினர். அதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, "அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும்" என்று கூறினார்.

அவரின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தனர். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மநுஸ்மிருதி மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகதான் தெரிவார்" என்று கூறியுள்ளார். இதனிடையே அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் அவமதிப்பு பேச்சு குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Also Read: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' : "வாக்காளர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது" - TR பாலு எம்.பி பேச்சு !