Politics

ஒன்பது வரிக்குள் ஒன்பது பல்டிகள்... இதுதான் அண்ணாமலை லண்டனில் கற்ற பாடமா - முரசொலி கிண்டல் !

முரசொலி தலையங்கம் (13-12-2024)

முதல்வரின் உறுதியும்

பழனிசாமியின் உளறலும் அண்ணாமலையின் பிதற்றலும்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என்பதை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் காட்டியதன் மூலமாக தனது உறுதியை நிலை நிறுத்தி விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை ‘வரலாற்றுச் சிறப்பு நாள்’ என்று சூழலியல் ஆர்வலர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை மாவட்டம் -– மேலூர் வட்டம் – நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதியை ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியுள்ளது. இன்றியமையாத மற்றும் “முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசின் அனுமதி இன்றி ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது” என்று தமிழ்நாடு அரசு 3.10.2023 அன்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. இதனை மீறி ஏலம் விட்டுள்ளது பா.ஜ.க. அரசு.

‘டங்ஸ்டன்’ உரிமம் வழங்கப்படும் பகுதியானது குடைவரைக் கோயில்களும், சமணச் சின்னங்களும், பஞ்ச பாண்டவர் படுகைகளும், தமிழ் பிராமி வட்டெழுத்துகளும் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும். அரியவகை உயிரினங்களும் உள்ளன. எனவே, அதனை ‘பல்லுயிர் பெருக்கத் தலமாக’ 2022 ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை மீறியும் ஏலம் விட்டது ஒன்றிய அரசு. இது கவனத்துக்கு வந்ததும், ‘அனுமதிக்க மாட்டோம்’ என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். பிரதமருக்கு கடிதம் அனுப்பினார் முதலமைச்சர்.

மதுரை வட்டாரத்தில் போராட்டம் நடத்திய மக்களிடம் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தியை அனுப்பி, ‘எந்தச் சூழலிலும் தமிழ்நாடு அரசு அனுமதி தராது’ என்று சொல்ல வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “இந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க. சார்பில் வரவேற்று ஆதரித்து வாக்களிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டு, தி.மு.க.வைக் குற்றம் சாட்டுவதில் கவனம் செலுத்தினார் பழனிசாமி. முதலமைச்சர் அவர்களின் பதிலில் தெறித்த தெளிவு, பழனிசாமியை பதட்டம் அடைய வைத்துவிட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகமிகத் துணிச்சலாக அளித்த தனது பதில்களில்...

•ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் ஏலம் விட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசைப் பொறுத்தவரையில், நிச்சயமாகச் சொல்கிறேன். ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், நிச்சயமாக, உறுதியாக இந்த அரசு அதற்குரிய அனுமதியைத் தருவதற்கான வாய்ப்பே கிடையாது. அதிலே திட்டவட்டமாக இருக்கிறோம். இதுதான் முடிவு.

•திரும்பத் திரும்ப ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன். நான் முதலமைச்சராக இருக்கிற வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது. வந்தால் அதைத் தடுத்தே தீருவோம்.

•திரும்ப, திரும்பச் சொல்கிறேன்; நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கின்ற வரையிலே, நிச்சயமாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அனுமதிக்க மாட்டோம்; அனுமதிக்க மாட்டேன்.

•எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் ஒன்றிய அரசால் போடப்படக்கூடிய இந்தத் திட்டம், நிச்சயம் வரக்கூடிய வாய்ப்பு இருக்காது, அதைத் தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழல் வந்தால் இந்தப் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்; முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

– என்று சொன்னார்கள். இதனை விட உறுதியும் இறுதியுமான தீர்ப்பு இருக்க முடியாது. அதன்பிறகாவது பழனிசாமி அமைதியாக இருந்திருக்க வேண்டும். ‘நாடாளுமன்றத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்களே? கனிம வளச் சட்டம் வந்த போது என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டார் பழனிசாமி. “தி.மு.க. சார்பில் கடுமையாக எதிர்த்தோம்” என்பதை முதலமைச்சர் பதிவு செய்தார். “அ.தி.மு.க. சார்பில் ஆதரித்தது ஏன்?” என்று கேட்டபோது பழனிசாமியால் பதில் அளிக்க முடியவில்லை.

கனிம வள மசோதாவை அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவையில் தம்பிதுரை ஆதரித்துப் பேசியது வெளிச்சத்துக்கு வந்தது. “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பினார்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. ‘டங்ஸ்டன்’ உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். இதனையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார் முதலமைச்சர் அவர்கள். அதன் பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் ஆகிவிட்டார் பழனிசாமி.

இதற்கிடையில் பா.ஜ.க. அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையைப் படித்தவர்கள் அனைவருக்கும் தலைவலி வந்திருக்கும். ஒன்று டங்க்ஸ்டனை ஆதரிக்க வேண்டும். அல்லது எதிர்க்க வேண்டும். லண்டனில் படித்துவிட்டு வந்ததால் ஆதரித்து எதிர்த்துள்ளார் அண்ணாமலை.

தி.மு.க. அரசின் முழுமையற்ற தகவல்களால் மக்கள் எதிர்த்தார்களாம். திட்டத்தைக் கைவிட ஒன்றிய அமைச்சரிடம் இவரே சொன்னாராம். விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் செயல்பட மாட்டாராம். ஒன்பது வரிக்குள் ஒன்பது பல்டிகள். அண்ணாமலை லண்டனில் கற்ற பாடம் இதுதான் போலும்!

“தி.மு.க. அரசு இதனைச் செயல்படுத்த விடாது” என்று முதலமைச்சர் காட்டிய உறுதியானது, எதிர்க்கட்சிகளின் அனைத்து பொய் மலைகளை யும் தவிடு பொடியாக்கிவிட்டது.

Also Read: “குகேஷின் வெற்றியினால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது” : முதலமைச்சர், துணை முதலமைச்சர் புகழாரம்!