Politics
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றியை பெற்றிருந்தார்.
தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல அமேதி தொகுதியிலும் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியாக சந்திக்கின்றன. ஆனால் கேரளாவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ரெதிர் அணியாக தேர்தலை சந்திக்கவுள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து CPI கட்சி வேட்பாளர் ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
இதனை குறிப்பிட்டு சிலர் சமூகவலைத்தளத்தில் விமர்சித்து வந்தனர். எனினும் மாநில அளவில் பாஜக வலுவில்லாத நிலையில், காங்கிரஸ் - இடதுசாரி ஒரே கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகும் என்றும், எனவே கேரளாவில் காங்கிரஸ் - இடதுசாரிகள் தனித்தனியே தேர்தலை சந்திப்பதுதான் சிறந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியில் இருந்தால் அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன் என வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா கூறியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்தியா கூட்டணியை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கூட்டணியாக உள்ளது. அதனால்தான் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது.
அமேதி தொகுதி அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தில் இடதுசாரிகள் என்ன கூட்டணி முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து எனது முடிவு இருக்கும். அங்கு காங்கிரஸும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியாக இருந்தால் நிச்சயமாக அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!