Politics
"கர்நாடக பாஜக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது, இது மோடிக்கு தெரியுமா"- மூத்த பாஜக தலைவர் விமர்சனம்
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
தற்போது கர்நாடகாவிலும் பாஜக கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திராவுக்கு சீட் வழங்கி பாஜக அறிவித்தது. ஆனால், அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுவந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஈஸ்வரப்பா ஷிவமோகா தொகுதியில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். மேலும், இது குறித்து விவாதிக்க டெல்லி சென்ற நிலையிலும் அவரை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்டுவேன் என்று அறிவித்தார். மேலும், கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து எடியூரப்பாவின் மற்றொரு மகனான பி.ஒய்.விஜயேந்திராவை நீக்கினால் மட்டுமே ஷிவமொகாவில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெறுவேன் என்று கூறினார்.
இந்த நிலையில், தற்போது கர்நாடக பாஜக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது. அந்தக் குடும்பத்தில் இருந்து கட்சியை விடுவிக்க போராடுவேன் என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "காங்கிரஸில் வாரிசு அரசியல் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அதேபோல், கர்நாடக பாஜக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது. இது மோடிக்கு தெரியுமா ? அந்தக் குடும்பத்தில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டும். தொண்டர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற நான் போராடுவேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!