Politics

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத குடியரசுத் தலைவர் : உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கேரள அரசு !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கேரள அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கேரள ஆளுநரை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலுவையில் இருந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 3 மசோதாக்களுக்குக் கடந்த மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். எனினும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவரும் அதனை நிலுவையில் வைத்துள்ளார். இதன் காரணமாக இது குறித்து கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், "7 மசோதாக்களில் 4 மசோதாக்களைள் எந்தவித காரணங்களும் கூறாமல் குடியரசுத் தலைவர் நிலுவையில் வைத்துள்ளார். குடியரசுத் தலைவர் நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும். மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை ஆளுநருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர்ந்தது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது. எனினும் இது குடியரசுத் தலைவருக்கு எதிரான மனு அல்ல என கேரளா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தேர்தல் 2024 : அடுத்தடுத்து பின்வாங்கும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகள்... வட மாநிலங்களிலும் வீழும் பாஜக!