Politics

ம.பி. தலைமைச் செயலகம் தீ விபத்து : “இதன் பின்னணியில் பாஜக உள்ளது” - காங். பகிரங்க குற்றச்சாட்டு !

மத்திய பிரதேசத்தில் மோகன் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இங்கிருக்கும் தலைமை செயலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் அரசின் தலைமை செயலகமான வல்லப் பவன் (Vallabh Bhawan) அமைந்துள்ளது. இங்கு இன்று காலை சுமார் 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவத்திற்கு பின்னணியில் பாஜக அரசு இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி (Jitendra Patwari) பேசியதாவது :

ஜிதேந்திர பட்வாரி, MP CM மோகன் யாதவ்

“ஊழலின் அடையாளமாகவே பாஜக மாறிவிட்டது. வல்லப பவனில் (தலைமைச் செயலகம்) இதுவரை நான்கு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. வல்லப பவனில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னணியில் பாஜக அரசு உள்ளது. பாஜக அரசின் பல்வேறு ஊழல்களை மறைக்கவே இந்த விபத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது.

ஏற்கனவே வல்லப பவன், சத்புரா பவன் மற்றும் பிற அமைச்சகங்களில் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு காரணம் என்ன? யார் குற்றவாளிகள்? தீ விபத்தில் எந்த ஆவணங்கள் எரிந்து போனது? என ஒரு தரவும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவில், பல மாநிலங்கள் இருக்க, மத்தியப் பிரதேச அமைச்சகங்களில் மட்டும் ஏன் தீப்பிடிக்கிறது?” என்றார்.

Also Read: Youtuber-ஐ தாக்கிய சக Youtuber.. கைகலப்பாக மாறிய இணையத்தில் வெடித்த சண்டை - மீண்டும் சர்ச்சையில் எல்விஷ்!