Politics

குஜராத்தில் 29 ஆண்டுகளாக புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை: ஒப்புக்கொண்ட பாஜக அரசு!

குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் முறையாக பாஜக ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. அதிலிருந்து தற்போதுவரை அங்கு பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது.

இதில் 2001-2012 வரை தற்போதைய பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தார். இந்த நிலையில் குஜராத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவையில் புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த குஜராத் பாஜக அரசு குஜராத்தில் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருவதாகவும், 1995-ம் ஆண்டிலிருந்து புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

அதே நேரம் 2023-ம் ஆண்டு மட்டும் 4 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 1871 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் முதல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1995 ஆம் ஆண்டு பாவ்நகரில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. அதன்பின்னர் எந்த மருத்துவக்கல்லூரியும் அங்கு அமைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என கலைஞர் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு அதன்படி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட புதிய மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி கோரியும் அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.