Politics

மோடியின் ஆதரவாளர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் - பிரபல நடிகர் கோரிக்கை !

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.

அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.

அந்த வகையில் ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.விவசாயிகள் மீது போலீசார் நடத்திய ரப்பர் குண்டு தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்டு சுபகரன்சிங் என்ற 23 வயது இளம் விவசாயி படுகாயமடைந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அதற்குள் அந்த விவசாயியின் உயிரிழந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்துப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா?? ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த கபட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் மறுபுறம் ஊடகங்களே விவசாயிகளை தேச துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன. இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்லுவது?

விவசாயிகளை தடுக்கும் நோக்கில் சாலைகள் தோண்டப்பட்டன; தடுப்புகள் எழுப்பப்பட்டன; தோட்டாக்களும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசி அனைத்தையும் இந்த மோடி அரசு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அவர்களை தேச துரோகிகள் என்று விளக்க தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்!குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்! நமது விவசாயிகள் தேச விரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?" என்று கூறியுள்ளார்.

Also Read: மீனவர்கள் தொடர் கைது விவகாரம்: இலங்கை அரசின் செயலை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு - வைகோ விமர்சனம் !