Politics

விவசாயிகள் மீது பாஜக அரசு நடத்திய கொடூர தாக்குதல் : ரப்பர் குண்டு பாய்ந்து இளம் விவசாயி பரிதாப பலி !

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு வருடத்திற்கு மேலாக கடும் குளிர், மழை, தடியடி, உயிரிழப்புகள் என அனைத்தையும் தாங்கி ஒன்றிய அரசை தங்களது கோரிக்கைக்குப் பணியவைத்தார்கள் விவசாயிகள்.

அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். போலிஸார் சாலைகளில் ஆணிகள், தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் அதனை தகர்ந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.

இந்த நிலையில், ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் மீது போலீசார் நடத்திய ரப்பர் குண்டு தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்டு சுபகரன்சிங் என்ற 23 வயது இளம் விவசாயி படுகாயமடைந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அதற்குள் அந்த விவசாயியின் உயிரிழந்துள்ளார். இவர் இந்த விவசாயிகள் போராட்டத்தில் போலிஸார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.