Politics

"மோடி விமானி இல்லாமல்கூட பயணிப்பார், ஆனால் அதானி இல்லாமல் பயணிக்க மாட்டார்" - உதயநிதி விமர்சனம் !

ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டு, பாசிச பாஜகவை விரட்டியடிக்க வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தி உரிமை மீட்க ஸ்டாலின் குரல் என்னும் பெயரில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் பரப்புரை திமுக சார்பில் தொடங்கப்பட்டது..

இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உரிமை மீட்க ஸ்டாலின் குரல் என்னும் பொது கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் வின் 2 வது மாநில மாநாட்டில் 7.5 லட்சம் பேர் கலந்து கொண்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது, இம்மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் நாம் பாதி கிணறு தான் தாண்டி உள்ளோம், இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான் மாநாட்டின் முழு வெற்றி ஆகும்.

நாமோ அல்லது கூட்டணி வேட்பாளர் யார் இந்த தொகுதியில் நின்றாலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் வேட்பாளர் என்று நாம் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மத நல்லிணக்கம் கொண்ட மாநிலம் என்பதற்கு சான்று. மதம் வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களின் தமிழ்நாட்டில் ஒரு போதும் பழிக்காது.

நாம் 1 ரூபாய் வரி செலுத்தினால், 26 பைசாதான் திரும்ப ஒன்றிய அரசு தருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக தருகிறது. நாம் 6 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளோம். ஆனால் 1.50 லட்சம் கோடி தான் ஒன்றிய வரி வருவாய் திரும்பி அளித்துள்ளது.

ஏழையாக பிறந்து ஏழையாக வளர்ந்தவர் என கூறும் பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் அனைவரையும் ஏழையாக மாற்றிவிட்டார். ஏழை என்று கூறும் பிரதமர் மோடியின் நண்பர் யார் என்றால் உலக பணக்காரர் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ள அதானிதான். மோடி இந்தியாவில் இருப்பதை விட வெளி நாடுகளில் தான் இருப்பர். அப்போது அவர் விமானி இல்லாமல் கூட பயணிப்பார், ஆனால் அதானி இல்லாமல் பயணிக்க மாட்டார்.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று பேரறிஞர் அண்ணா அன்றே கூறினார். இன்று இந்த கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இனி கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும். தேசிய கீதம் நமக்கு முக்கியம். அது போல தமிழ்தாய் வாழ்த்தும் நமக்கு முக்கியமானது" என்று கூறினார்.

Also Read: “தமிழ்நாட்டுக்கு மோடி செய்தது என்ன? - இதை பேசுவதற்கு பாஜகவிற்கு தைரியம் இருக்கா?” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!