Politics
அஜித் பவார் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் : தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு !
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகியோர் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என கூறிவந்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் முறையிட்ட நிலையில், பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அஜித் பவாரின் பிரிவுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 6-ம் தேதி அறிவித்தது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அஜித் பவார் தரப்பு பயன்படுத்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அதிக கட்சி நிர்வாகிகள் எங்கள் தரப்பே இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தங்களது தரப்பின் கலந்தாலோசிக்காமல் எவ்வித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்ககூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே அஜித் பவார் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலுக்கு குறைந்த காலஅளவே இருப்பதால் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!